மீனாட்சி அம்மன் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு திருத்தொண்டர்கள் சபை குற்றச்சாட்டு


மீனாட்சி அம்மன் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு திருத்தொண்டர்கள் சபை குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 May 2018 10:45 PM GMT (Updated: 17 May 2018 10:08 PM GMT)

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.4 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் தெரிவித்தார்.

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக திருத்தொண்டர்கள் சபை புகார் எழுப்பியது. இதையொட்டி கோவில் நிலங்கள் தொடர்பான தாசில்தார் சிவக்குமார், திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரே உள்ள பகுதியில் நேற்று காலை ஆய்வு செய்தனர். பின்னர் திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் நிருபர் களுக்கு பேட்டி அளித் தார். அவர் கூறியதாவது:-

மதுரை மீனாட்சி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளன. இந்த நிலங்களை ஏராளமானோர் தானமாக வழங்கி, அந்த இடத்தில் இருந்து வரும் வருமானத்தை கோவிலின் சிறப்பு பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தனர். தற்போது அந்த நிலங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

100 ஆண்டுகளுக்கு முன்புள்ள ஆவணங்கள் மூலம் மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் எதிரே உள்ள பகுதியில் மட்டும்ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்புள்ள சுமார் 68 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிலங்கள் கடந்த 1932-ம் ஆண்டு கோவிலுக்கு தானமாக எழுதி வைக்கப்பட்டவை. அந்த நிலங்களை போலி ஆவணங்கள் தயாரித்து பெயர் மாற்றம் செய்து பலர் ஆக்கிரமித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலங்களை மீட்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் கோவில் நிர்வாகத்தினர் அவற்றை பின்பற்றவில்லை.

கடந்தாண்டு இந்த நிலம் தொடர்பாக கோவில் ஆணையரிடம் புகார் அளித்தேன். அவர்கள் அந்த சொத்துகளை மீட்க இது நாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகம் முழுவதும் கோவில் நிலங்களை தனியார் ஆக்கிரமித்துள்ளனர். இதனை மீட்க வேண்டும். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பிள்ளையார்பட்டி கோவிலுக்கு வழங்கப்பட்ட நிலங்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். சட்டரீதியாக அவற்றை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story