உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 18 May 2018 11:00 PM GMT (Updated: 18 May 2018 6:50 PM GMT)

மீஞ்சூர் பேரூராட்சியில் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீஞ்சூர்,

மீஞ்சூர் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கிறது. இந்த பேரூராட்சிக்கு கொசஸ்தலை ஆற்றின் கரையில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து குழாய் மூலம் கொண்டு வரப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் வழியாக பிரித்து நாள்தோறும் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த குடிநீர் உவர்ப்பு தன்மை அதிகமாக உள்ளதால் பெரும்பாலும் இதர தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த பேரூராட்சியில் நல்ல சுவையான குடிநீர் பேரூராட்சி நிர்வாகத்தால் சரியாக வினியோகம் செய்ய முடியவில்லை.

இதனை தனியார் சிலர் பயன்படுத்திக்கொண்டு குடிநீரை டிராக்டர்கள் மூலம் ஒரு குடம் ரூ.5-க்கு விற்பனை செய்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 20-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் குடிநீரை வினியோகம் செய்கின்றனர்.

மேலும் மீஞ்சூர் பேரூராட்சி சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு காசுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் கிராம மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதியுறுகின்றனர். மீஞ்சூர் காந்திரோடு பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் கழிவுநீருடன் கலக்கிறது.

உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான குடிநீரை வழங்க வேண்டுவதுடன் தொற்றுநோய் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story