குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்


குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 18 May 2018 11:15 PM GMT (Updated: 18 May 2018 8:50 PM GMT)

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

முத்துப்பேட்டை,

குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு அங்காளம்மன் கோவில் தெருவில் நீண்ட காலமாக நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை சரி செய்யும் வகையில் சில மாதங்களுக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து அப்பகுதியில் உள்ள சிமெண்டு சாலையை உடைத்து குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்தது. பின்னர் இந்த பணி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் குடிநீர் இணைப்பு கொடுக்கவில்லை. உடைக்கப்பட்ட சிமெண்டு சாலையையும் சரி செய்யவில்லை. நல்ல நிலையில் இருந்த சிமெண்டு சாலையும் முற்றிலும் சேதமடைந்தது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியவில்லை.

எனவே குடிநீர் குழாயை சரி செய்து குடிநீர் தடையின்றி கிடைக்கவும், உடைக்கப்பட்ட சிமெண்டு சாலையை சீரமைத்து தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பேரூராட்சி நிர் வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த அப்பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடந்த மாதம் 27-ந் தேதி முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால் இன்றுவரை மேற்கண்ட பணிகள் முடிக்கப்படவில்லை. எனவே குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 2-வது முறையாக மாவட்ட பொருளாளர் வெற்றி தலைமையில் முத்துப்பேட்டைபேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். இதில் ஒன்றிய செயலாளர் செல்வரசூன், நகர செயலாளர் கண்ணதாசன், ஒன்றிய பொருளாளர் வீரபாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் ராஜா, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story