பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 May 2018 11:30 PM GMT (Updated: 18 May 2018 9:16 PM GMT)

வேளாங்கண்ணி அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேளாங்கண்ணி,

வேளாங்கண்ணி அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

வேளாங்கண்ணி அருகே மேலப்பிடாகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கீழையூர் ஒன்றியக்குழு சார்பில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாநில குழு உறுப்பினர் நாகராஜன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் விவசாய சங்கத்தை சேர்ந்த இளங்கோ, செல்லையன், சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

2016-17-க்கான பயிர்க்காப்பீட்டு தொகையை விடுபட்டுள்ள திருப்பூண்டி, ஆய்மழை, பாலக்குறிச்சி, கீழையூர், வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு உடன் வழங்க வேண்டும்.

2017-18-ம் ஆண்டுகளில் மழை வெள்ளம் காரணமாக மூன்று முறை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு அறிவித்துள்ள நிவாரண தொகையை உடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் தாசில்தார் தையல்நாயகி, உதவி திட்ட அலுவலர் கீதா ரெத்தினம், வட்டார வளர்ச்சி அலுவர்கள் ஜோதிமணி, பாஸ்கரன், கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் நாகை - திருத்துறைபூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story