பாப்பான் விடுதியில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 14 பேர் காயம்


பாப்பான் விடுதியில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 14 பேர் காயம்
x
தினத்தந்தி 18 May 2018 11:30 PM GMT (Updated: 18 May 2018 10:15 PM GMT)

ஆலங்குடி அருகே பாப்பான் விடுதியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 14 பேர் காயமடைந்தனர்.

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பாப்பான்விடுதியில் பிரசித்தி பெற்ற முத்து முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவில் அருகே வாடிவாசல் அமைக்கப்பட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்தது. பின்னர் மாவட்ட நிர்வாகிகள் வாடிவாசலை பார்வையிட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கினர். அதனை தொடர்ந்து நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முன்னதாக அங்கு கொண்டு வரப்பட்ட காளைகளை கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். பின்னர் மாடுபிடி வீரர்களை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து களத்தில் செல்ல அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

தொடர்ந்து ஜல்லிக்கட்டை மாவட்ட உதவி கலெக்டர் கே.எம்.சரயு, மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, கரூர், தேனி, மதுரை, தஞ்சாவூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 1018 காளைகளும், வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 241 மாடுபிடி வீரர்களும் அடக்க போட்டி, போட்டனர். இதில் சில காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. மேலும் சில காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக் கட்டினர். அதனை பார்த்த பொதுமக்கள், இளைஞர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 9 மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டை காண வந்த பார்வையாளர்கள் 4 பேர் மற்றும் ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளர் ஒருவர் என 14 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் 5 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் மோட்டார் சைக்கிள், தங்கம், வெள்ளி நாணயங்கள், மின்விசிறி, சில்வர் பாத்திரங்கள், கட்டில், சைக்கிள், மிக்சி, குக்கர் உள்பட பல்வேறு பரிசு வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டை ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன், தாசில்தார் ரெத்தினாவதி, வருவாய் ஆய்வாளர் ஆரோக்கியசேவியர், அரசு அதிகாரிகள் மற்றும் ஆலங்குடி, பாப்பான்விடுதி சுற்றுவட்டார கிராமபொதுமக்கள், இளைஞர்கள் கண்டுகளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்பேரில் ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் முத்தலிபு தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் உள்பட ஏராளமான போலீசார் செய்திருந்தனர்.

Next Story