கொண்டாட்டமும் போராட்டமும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது, கமல்ஹாசன் பேச்சு


கொண்டாட்டமும் போராட்டமும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது, கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 18 May 2018 11:30 PM GMT (Updated: 18 May 2018 11:30 PM GMT)

கொண்டாட்டமும் போராட்டமும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்க கூடாது என்று கமல்ஹாசன் கூறினார்.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் நேற்று சுற்றுப்பயணம் செய்தார். காலையில் நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் பேசிய அவர் பிற்பகலில் ராஜபாளையத்தை வந்தடைந்தார். அங்கு ஜவஹர் மைதானத்தில் திரண்டிருந்தோர் மத்தியில் பேசினார். அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று விட்டு சிவகாசி வந்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்த நிலையில் பஸ் நிலையம் அருகே திரண்டிருந்தவர்கள் மத்தியில் பேசியதாவது:-

நீங்கள் இங்கு பெய்த மழையில் நனைந்துள்ளர்கள். நான் உங்கள் அன்பு மழையில் நனைகிறேன். இந்த அன்பை தரிசிக்கத்தான் நான் இந்த பயணத்தையே மேற்கொண்டேன். உங்களுக்கு என்று ஒரு கடமை இருக்கிறது. அதை நீங்கள் செய்யவேண்டும். அதை நீங்கள் செய்துவிட்டால் கமல்ஹாசன் செய்ய வேண்டிய கடமை எளிதாகி விடும். அதனால் நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள். கிராமசபை கூட்டம் நடக்கும் அல்லவா? அது போன்ற கூட்டங்களில் நீங்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

வருகிற ஆகஸ்டுமாதம் 15-ந்தேதி நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். நமது அமைப்பின் சார்பில் விசில் என்ற செயலி தொடங்கப்பட்டுள்ளது நீங்கள் அறிவீர்கள். அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும். மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களுக்காகவே உருவாக்கப்பட்டது இது. இப்போது நான் இங்கு வந்திருப்பது உங்கள் முகங்களை பார்க்கவும், உங்கள் குறைகளை கேட்கவும், செவிசாய்க்கவும் தான்.

நான் திரும்பவும் ஒரு முறை சிவகாசிக்கு கண்டிப்பாக வருவேன். இப்போது நமது கொண்டாட்டங்களும், போராட்டங்களும் எதார்த்த வாழ்க்கைக்கு இடையூறு இல்லாமலும், மற்றவர்களுக்கு இடஞ்சல் இல்லாமலும் நடக்க வேண்டும். இப்போது நம் அன்பை பகிர்ந்து கொண்டோம். ஆனால் நாம் தற்போது போக்குவரத்துக்கு இடையூறாக நின்று கொண்டு இருக்கிறோம். நமக்கு கடமை இருக்கிறது. அவரவர் தங்கள் கடமைகளை செய்யச் சென்று கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு இடையூறாக மக்கள் நீதி மய்யம் இருக்கக் கூடாது. அதனால் உங்களிடம் இருந்து உங்கள் அன்போடு விடை பெறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மழை பெய்ததால் 2 நிமிடம் மட்டும் பேசிய கமல்ஹாசன் சிவகாசியில் இருந்து சாத்தூர் சென்றார். அங்கும் மழை பெய்ததால் அவரால் பேச இயலவில்லை. அதனால் அனைவரையும் பார்த்து கையசைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

இரவில் விருதுநகர் தேசபந்து திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார். 

Next Story