லாரி மீது வேன் மோதல்: டிரைவர் பரிதாப சாவு; 10 பேர் படுகாயம்


லாரி மீது வேன் மோதல்: டிரைவர் பரிதாப சாவு; 10 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 19 May 2018 9:45 PM GMT (Updated: 19 May 2018 6:36 PM GMT)

லாரி மீது வேன் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். 10 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

பெருந்துறை,

வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தை சேர்ந்த 24 பேர் கேரளாவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி ஒரு வேனில் நேற்று முன்தினம் புறப்பட்டார்கள். வேனை பனப்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் சுதாகர் (வயது 36) என்பவர் ஓட்டினார்.

நேற்று அதிகாலை 5½ மணி அளவில் வேன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கந்தாம்பாளையம் புதூர் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டு இருந்தது.

இந்தநிலையில் முன்னால் ஒரு லாரி சென்றுகொண்டு இருந்தது. அதை முந்திச்செல்ல டிரைவர் சுதாகர் முயன்றார். அப்போது நிலை தடுமாறி திடீரென லாரியின் பின்பக்கத்தில் வேன் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் வேனின் டிரைவர் இருக்கை இருக்கும் பகுதி நொறுங்கியது. டிரைவர் சுதாகர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வேனுக்குள் இருந்த 24 பேரும் இடிபாடுகளில் சிக்கி அய்யோ அம்மா என்று அலறினார்கள். இதில் 10 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சு மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் சுதாகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். இதுகுறித்து மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story