ரஜினி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மாற்றங்கள் ஏற்படும் தமிழருவி மணியன் பேட்டி


ரஜினி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மாற்றங்கள் ஏற்படும் தமிழருவி மணியன் பேட்டி
x
தினத்தந்தி 19 May 2018 11:00 PM GMT (Updated: 19 May 2018 9:28 PM GMT)

ரஜினி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மாற்றங்கள் ஏற்படும் என்று ஓசூரில் தமிழருவி மணியன் கூறினார்.

ஓசூர்,

ஓசூரில் பெருமாள் மணிமேகலை கல்லூரி சார்பில் பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் மேல்படிப்பிற்கான வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு மாணவர்களிடத்தில் சிறப்புரையாற்றினர். இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகா மாநிலத்தில் நடைபெறும் அரசியல் என்பது ஜனநாயக படுகொலை ஆகும். மணிப்பூர், கோவா, மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு ஒரு நியாயம், கர்நாடகா மாநிலத்திற்கு ஒரு நியாயம் என்று உங்களது நியாய தராசில் எடைகற்களை மாற்றி மாற்றி போட்டு ஏமாற்ற கூடாது. இது மோடிக்கு பெருமையையோ, புகழையோ சேர்க்க கூடிய செயல் அல்ல.

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சித்தராமைய்யாவும், மத சார்பற்ற ஜனதா தள கட்சியின் தேவகவுடா மற்றும் குமாரசாமி ஆகியோரும் ஒருவருக்கொருவர் மிக மோசமாக விமர்சித்து வந்தனர். எலியும் பூனையுமாக இருந்தவர்கள் தற்போது நட்பு கொண்டு நடிப்பது பதவியை பங்கிட்டு கொள்வதற்காகத்தான். இவர்கள் நடத்துவது பதவிக்கான அரசியல். இதில் மக்கள் நலன் ஒன்றுமில்லை.

10 நாட்களுக்கு ஒருமுறை நான் ரஜினியை நேரில் சந்தித்து பேசுவேன். மற்ற நேரங்களில் தொலைபேசியில் கருத்துகளை பகிர்ந்து கொள்வோம். அவர் என்னுடைய சகோதரர். அவரை நான் கைவிட்டாலும் தமிழ்நாடு ரஜினியை கைவிடாது. அவரை கோட்டையில் முதல்-அமைச்சராக அமர்த்துவதற்கு தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள். அனைத்து மக்களின் மனதில் இருப்பவர் ரஜினிகாந்த் மட்டும் தான்.

காவிரி நதிநீர் பங்கீட்டில், மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தது டெல்டா விவசாயிகளுக்கு மன நிறைவை தருகிறதா? என்பது தான் முக்கியமே தவிர, தமிழகத்தை போர்க்களமாக்கும் அரசியல்வாதிகளுக்கு மன நிறைவை தருகிறதா? என்பதை பார்க்க கூடாது. தமிழகத்தில் ரஜினி ஆட்சிக்கு வந்ததும் மாற்றங்கள் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story