கடந்த 7 ஆண்டுகளாக தமிழகம் மின் மிகை மாநிலமாக விளங்குகிறது அமைச்சர் பி.தங்கமணி பேச்சு


கடந்த 7 ஆண்டுகளாக தமிழகம் மின் மிகை மாநிலமாக விளங்குகிறது அமைச்சர் பி.தங்கமணி பேச்சு
x
தினத்தந்தி 19 May 2018 11:00 PM GMT (Updated: 19 May 2018 9:28 PM GMT)

தமிழகம் கடந்த 7 ஆண்டுகளாக மின் மிகை மாநிலமாக விளங்குகிறது என்று தர்மபுரியில் நடந்த வேலூர் மண்டல ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.

தர்மபுரி,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வேலூர் மண்டலம் மற்றும் மின் தொடரமைப்பு கழகத்தின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமை தாங்கினார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி, மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

தமிழகம் கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து மின் மிகை மாநிலமாக விளங்குகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தீனதயாள் உபத்யாயா கிராமின் ஜோதி யோஜனா திட்டத்தில் ரூ.32 கோடியே 61 லட்சம் மதிப்பில் 5 துணை மின் நிலையங்களும், ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.33 கோடியே 41 லட்சம் மதிப்பில் ஒரு துணை மின் நிலையமும், உஜ்வால் டிஸ்்காம் அஸன்ஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பில் ஒரு துணை மின்நிலையமும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

விண்ணப்பித்த ஒரே நாளில் வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டமும், தொழிற்சாலைகளுக்கு 15 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கும் திட்டமும், மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு மின்இணைப்பு வழங்கும் சிறப்பு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு தட்கல் முறை, சுயநிதி முறை மற்றும் சாதாரண முறையில் மின் இணைப்பு வழங்கும் திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மின்சாரத்துறை பணியாளர்கள் அவ்வப்போது கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். மின் இழப்பை மேலும் குறைப்பதற்கு துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 12 சர்க்கரை ஆலைகள் மூலம் 183 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2 சர்க்கரை ஆலைகளின் மின் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சர்க்கரை ஆலைகளில் பணிகள் நிறைவடைந்த உடன் மின் உற்பத்தி தொடங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்த கூட்டத்தில் பகிர்மான பிரிவு இயக்குனர் ஹெலன், தொடரமைப்பு இயக்குனர் செந்தில்வேலன், வேலூர் மண்டல தலைமை பொறியாளர் அப்துல்ரஹீம், மின்தொடரமைப்பு கழகம் தலைமை பொறியாளர் ஐரிஸ்சந்திரா, பொது கட்டுமான வட்ட மேற்பார்வை பொறியாளர் பால்ராஜ், தர்மபுரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சலபதிராவ், செயற்பொறியாளர் சிவானந்தம் உள்பட மின்வாரிய அதிகாரிகள், கலந்து கொண்டனர். 

Next Story