உழவன் கைபேசி செயலியை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்


உழவன் கைபேசி செயலியை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 19 May 2018 11:58 PM GMT (Updated: 19 May 2018 11:58 PM GMT)

உழவன் கைபேசி செயலியை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் கூறியதாவது.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வேளாண்மைத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை இணைந்து துரித நடவடிக்கை எடுத்து 4 ஆயிரத்து 500 விவசாயிகளுக்கு ரூ.8 கோடி பெறப்பட உள்ளது. இன்னும் ஓரு வார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் அவை வரவு வைக்கப்பட உள்ளது. வேளாண்மைத்துறையில் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்திட்டம் விவசாயிகளின் ஒத்துழைப்போடு 80 சதவீதத்தில் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் விவசாயிகள் அனைவரும் பங்குபெற்று பயனடைய வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் மாநிலத்திலேயே ஒரு முன்னோடி மாவட்டமாக திகழ அனைத்து விவசாயிகளும் ஒத்துழைக்கவேண்டும். கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் வேளாண்துறை மூலம் 45 உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களும், தோட்டக்கலைத்துறை மூலம் 11 உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களும் அமைக்கப்பட்டு நல்லமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற கூற்றிற்கு இணங்க விவசாயிகள் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட்டு இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டும்.

நீடித்த நிலையான மானாவாரி இயக்க திட்டத்தின் கீழ் 2-வது கட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படுத்துவதற்கு திருத்தணி, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டு அடிப்படை புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் பணிகள் மற்றும் மானாவாரி தொகுப்பு விவசாயிகள் குழுக்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய விவசாயிகளுக்கு 1,800 ஹெக்டேர் பரப்பளவில் கோடை உழவுக்கான மானியம் விதைகள் மற்றும் இதர இடுபொருட்கள் வழங்கும் பணிகள் இந்த நிதியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

விவசாயிகளின் உற்பத்தி இருமடங்காகவும், வருமானம் மும்மடங்காகவும் சாதனை அடையும் வகையில் விவசாயிகளுக்காக தமிழக அரசு அறிமுகப்படுத்திய உழவன் கைபேசி செயலியை அதிக அளவில் பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கடந்த மாதத்தில் பெறப்பட்ட விவசாயிகளுடைய கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மீது விவாதிக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து 100-க்கும் மேற்பட்ட மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

அப்போது கூட்டத்திற்கு வந்திருந்த திரளான விவசாயிகள் பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து காப்பீடு தொகை பெறாத விடுபட்ட விவசாயிகளுக்கு இழப்பு தொகை வழங்க வேண்டும். நீர் ஆதாரங்களான ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தடுப்பணைகள் கட்டவேண்டும். வரத்து கால்வாய்கள், ஏரி, குளங்களை சீரமைக்க வேண்டும். விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு உரிய பதில் அளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மேலும் காலியாக உள்ள வேளாண்மை உதவி அலுவலர் பணியிடங்களை நிரப்பவேண்டும். ஆற்றுப்படுகைகளில் மணல் எடுப்பதை தடுக்க வேண்டும். அங்கீகாரமற்ற வண்ணமீன் மற்றும் இறால் மீன் பண்ணைகளை அகற்ற வேண்டும். நீடித்த நிலையான கரும்பு சாகுபடி திட்டத்தில் பெருவிவசாயிகளுக்கு 90 சதவீதம் மானியம் வழங்க வேண்டும், ஏரிகளில் சவுடு மண் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அவற்றின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.

இந்த கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பாண்டியன், மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) எபினேசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பிரதாப்ராவ், ஆர்.டி.ஓ.க்கள் திவ்யஸ்ரீ, பவணந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story