பிரம்மதேசம் அருகே வி‌ஷம் குடித்து என்ஜினீயர் தற்கொலை


பிரம்மதேசம் அருகே வி‌ஷம் குடித்து என்ஜினீயர் தற்கொலை
x
தினத்தந்தி 20 May 2018 8:35 PM GMT (Updated: 20 May 2018 8:35 PM GMT)

பிரம்மதேசம் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வி‌ஷம் குடித்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

பிரம்மதேசம்,

பிரம்மதேசம் அருகே உள்ள மாரியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் லிங்கமூர்த்தி(வயது 24). என்ஜினீயர். இவர் கோணேரிக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். லிங்கமூர்த்தி, அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த காதல் விவகாரம் தெரிந்ததும், அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி லிங்கமூர்த்திக்கு திருமணம் செய்து வைக்க வேறு ஒரு பெண்ணை பார்த்ததாக தெரிகிறது. இது பற்றி தெரிந்ததும் லிங்கமூர்த்தி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். யாரிடமும் பேசவில்லை.

தற்கொலை

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த லிங்கமூர்த்தி, திடீரென வி‌ஷம் குடித்தார். பின்னர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரது வாயில் இருந்து நுரைவெளியேறியது. இதற்கிடையில் வெளியே சென்றிருந்த அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்தனர். அங்கு தங்களது மகன் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி உடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லிங்கமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story