10 மையங்களில் நடந்த ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வு


10 மையங்களில் நடந்த ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வு
x
தினத்தந்தி 20 May 2018 11:15 PM GMT (Updated: 20 May 2018 11:15 PM GMT)

வேலூரில் 10 மையங்களில் நடந்த ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வை 3,736 பேர் எழுதினார்கள்.

வேலூர்,

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் என்ஜினீயர் பணியில் அடங்கிய தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர், ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் (விவசாயம்), உதவி என்ஜினீயர், தமிழ்நாடு மீன் வளத்துறை என்ஜினீயரிங் உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் நடந்த இத்தேர்வை எழுத 5 ஆயிரத்து 640 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்காக வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, கோடையிடி குப்புசாமி பள்ளி, தோட்டப்பாளையம் பெண்கள் பள்ளி, தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, வேலப்பாடி விநாயக முதலியார் பள்ளி, ஊரீசு மேல்நிலைப்பள்ளி, ஊரீசு கல்லூரி, டி.கே.எம். கல்லூரி உள்பட 10 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வேலூரில் ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வு 2 கட்டங்களாக நடந்தது. காலையில் 2,820 பேர், மாலையில் 2,820 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் தேர்வு மையங்களுக்கு காலை 8 மணி முதல் வரத்தொடங்கினார்கள். காலையில் தேர்வு 10 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணிக்கு நிறைவடைந்தது. இதில் 1,877 பேர் தேர்வு எழுதினார்கள். 943 பேர் தேர்வு எழுதவில்லை.

மாலை நடந்த தேர்வு 2.30 மணிக்கு தொடங்கி 4.30 மணிக்கு நிறைவடைந்தது. இதில் 1,859 பேர் தேர்வு எழுதினார்கள். 961 பேர் தேர்வு எழுதவில்லை. 2 கட்டங்களாக நடந்த ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வை 3,736 பேர் எழுதினர். 1,904 பேர் எழுதவில்லை.

தேர்வர்கள் பலத்த சோதனைகளுக்கு பின்னரே தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களில் செல்போன், கால்குலேட்டர், கைக்கெடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தேர்வு மையங்களில் குடிநீர் வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.


Next Story