நகைக்கடையில் 100 பவுன் கொள்ளை: மர்மகும்பலை பிடிக்க போலீசார் தீவிரம்


நகைக்கடையில் 100 பவுன் கொள்ளை: மர்மகும்பலை பிடிக்க போலீசார் தீவிரம்
x
தினத்தந்தி 20 May 2018 11:42 PM GMT (Updated: 20 May 2018 11:42 PM GMT)

எட்டயபுரத்தில் நகைக்கடையின் சுவரில் துளையிட்டு 100 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

எட்டயபுரம்,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பெரிய கிணற்று தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ்ராஜா (வயது 40), எட்டயபுரம் பஜாரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் விஜயலட்சுமி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 18-ந்தேதி இரவு அந்த கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம கும்பல் 100 பவுன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு எட்டயபுரம் 12-வது வார்டு பாறை தெருவில் உள்ள சலூன்கடை உரிமையாளர் வீட்டில் இதேபோல் சுவரில் துளையிட்டு 30 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.13 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தான் நகைக்கடையிலும் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் 5 பேர் கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் கருதுகிறார்கள்.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மகும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

இருந்தாலும்அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். கொள்ளையர்கள் உள்ளூரை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story