திராவகம் குடித்து இளம்பெண் தற்கொலை


திராவகம் குடித்து இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 21 May 2018 12:10 AM GMT (Updated: 21 May 2018 12:10 AM GMT)

குடும்பத் தகராறில் திராவகம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திரு.வி.க.நகர்,

சென்னை புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலையில் வசிப்பவர் அப்துல்லாகான்(வயது 33). மாற்றுத்திறனாளியான இவர், சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்.

ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்ட அப்துல்லாகான், சபனாபேகம் (30) என்ற பெண்ணை கடந்த 2010-ம் ஆண்டு 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.

நேற்று முன்தினம் காலை கழிவறைக்குள் சென்ற சபனாபேகம் நீண்டநேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அப்துல்லாகான், கழிவறை கதவை தட்டினார். சிறிது நேரத்துக்கு பிறகு சபனாபேகம் கையில் கழிவறையை கழுவ பயன்படுத்தும் திராவக பாட்டிலுடன் வெளியே வந்தார்.

தான் மன உளைச்சலில் இருந்ததால் திராவகத்தை குடித்து விட்டதாக கணவரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்துல்லாகான், உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கிருந்து சபனாபேகம் மேல் சிகிச்சைகாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்த சபனாபேகம், நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புளியந்தோப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதில் விரக்தி அடைந்த சபனாபேகம் திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story