நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பயங்கரம்: திருமணம் ஆன 3 நாளில் மனைவி கத்தியால் குத்திக்கொலை


நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பயங்கரம்: திருமணம் ஆன 3 நாளில் மனைவி கத்தியால் குத்திக்கொலை
x
தினத்தந்தி 21 May 2018 11:15 PM GMT (Updated: 21 May 2018 9:39 PM GMT)

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் திருமணமான 3 நாளில் மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த டிரைவர், போலீசுக்கு பயந்து ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

பெங்களூரு, 

பெங்களூரு பிரேசர் டவுனில் வசித்து வந்தவர் ராஜூ (வயது 25). டிரைவர். இவருக்கும், பையப்பனஹள்ளி கே.எச்.பி. காலனியில் வசித்து வரும் மேரியின் மகள் ரோஷி(21) என்பவருக்கும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரோஷியின் நடத்தையில் ராஜூவுக்கு சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் ரோஷி தனது கணவரை பிரிந்து தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மேரியின் வீட்டுக்கு சென்ற ராஜூ, ரோஷியிடம் பேசியுள்ளார். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றவே ஆத்திரமடைந்த ராஜூ வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சரமாரியாக ரோஷியை குத்தியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து, ரோஷி இறந்ததை அறிந்த ராஜூ போலீசுக்கு பயந்து பிரேசர் டவுன் அருகே உள்ள பி.கே.காலனியில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரோஷி கொலை வழக்கு குறித்து பையப்பனஹள்ளி போலீசாரும், ராஜூ தற்கொலை குறித்து பிரேசர் டவுன் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் ராஜூவுக்கும், ரோஷியின் தாய் மேரிக்கும் ஏற்கனவே நெருக்கமான பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.

Next Story