வேலூர் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் ஊழியர்கள் மொட்டை அடித்து, நாமம் போட்டு நூதன போராட்டம்


வேலூர் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் ஊழியர்கள் மொட்டை அடித்து, நாமம் போட்டு நூதன போராட்டம்
x
தினத்தந்தி 24 May 2018 11:00 PM GMT (Updated: 24 May 2018 8:25 PM GMT)

வேலூர் கோட்டத்தில் பணியாற்றும் ஈடுபட்டு அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் வருகின்றனர். 3-வது நாளான நேற்று அரைமொட்டை அடித்தும், நாமம் போட்டும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்,

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டுப் போராட்டக்குழு சார்பில் வேலூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் பணியாற்றும் எழுத்தர்கள், தபால்காரர்கள், கிராமிய அஞ்சல் ஊழியர்கள், 4-ம் பிரிவு ஊழியர்கள் ஆகியோர் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் 3-வது நாளாகவும் நேற்றும் தபால் நிலையத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு 1½ ஆண்டுகள் ஆகியும் அந்த பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை. எனவே அக்கமிட்டியின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தொழிற்சங்க உறுப்பினர் சரிபார்ப்பு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

கோட்ட செயலாளர் வீரன் உள்பட பலர் அரைமொட்டை அடித்துக்கொண்டும், நெற்றியில் நாமம் போட்டும் நூதன முறையில் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “எங்களது கோரிக்கை குறித்து தொடர்ந்து போராடி வருகிறோம். தற்போது வேலூர் கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் பணிபுரிபவர்கள் பணிகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு மத்திய அரசு மொட்டை போட பார்க்கிறதா? அல்லது நாமம் போட பார்க்கிறதா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து பொதுமக்களுக்கு தெரியும் வண்ணம் நாங்கள் அரைமொட்டை, நாமம்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்றனர்.

Next Story