மாநிலத்தில் குழந்தை கடத்தல் கும்பல் இல்லை வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் முதல்–மந்திரி குமாரசாமி வேண்டுகோள்


மாநிலத்தில் குழந்தை கடத்தல் கும்பல் இல்லை வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் முதல்–மந்திரி குமாரசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 24 May 2018 11:00 PM GMT (Updated: 24 May 2018 9:34 PM GMT)

மாநிலத்தில் குழந்தை கடத்தல் கும்பல் இல்லை எனவும், இந்த விவகாரத்தில் பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் முதல்–மந்திரி குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரு, 

மாநிலத்தில் குழந்தை கடத்தல் கும்பல் இல்லை எனவும், இந்த விவகாரத்தில் பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் முதல்–மந்திரி குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை

கர்நாடக முதல்–மந்திரியாக குமாரசாமி நேற்று முன்தினம் பதவி ஏற்றார். இந்த நிலையில், நேற்று காலையில் அவர், பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் துமகூரு மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றார். பின்னர் துமகூருவில் உள்ள சித்தகங்கா மடத்திற்கு குமாரசாமி சென்றார். அங்கு மடாதிபதி சிவக்குமார சுவாமியை சந்தித்து குமாரசாமி ஆசி பெற்றார். மேலும் சிவக்குமார சுவாமியின் காலில் விழுந்து அவர் வணங்கினார். பின்னர் துமகூருவில் இருந்து அவர் பெங்களூருவுக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு வந்தார்.

பெங்களூருவில் ஜனதாதளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு குமாரசாமி சென்றார். அங்கு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் சபாநாயகர் தேர்தல் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களுடன் குமாரசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து எம்.எல்.ஏ.க்களுக்கு குமாரசாமி அறிவுரை வழங்கினார். அதே நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதும் எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதிக்கு சென்று மக்களை சந்திக்கலாம் என்றும் குமாரசாமி கூறியதாக தெரிகிறது.

முன்னதாக குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மக்கள் ஆதங்கப்பட அவசியமில்லை

கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக குழந்தைகள் கடத்தல் கும்பல் சுற்றுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அந்த கும்பலை பிடிக்கவும், குழந்தைகளை காப்பாற்றவும் மக்கள் தூங்காமல் சுற்றுவதாகவும் எனக்கு தகவல் வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் பேசினேன். மாநிலத்தில் குழந்தைகள் கடத்தும் கும்பல் எதுவும் இல்லை என்று தெரிவித்தனர். அதனால் வீண் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

குழந்தை கடத்தல் கும்பல் சுற்றுவதாக வதந்தி பரவுவது தடுக்கப்படும். இந்த விவகாரத்தில் பொதுமக்கள் ஆதங்கப்பட வேண்டிய அவசியமில்லை. உண்மை நிலையை மக்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். மேற்கு வங்காள மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்கும்படி போலீஸ் டி.ஜி.பி.யிடம் கேட்டுள்ளேன். அவர் விளக்கம் அளித்த பின்பு அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story