உடல் நலம்பெற பூஜை செய்வதாக கூறி மூதாட்டியிடம் 5 பவுன் நகை அபேஸ் - போலீஸ் விசாரணை


உடல் நலம்பெற பூஜை செய்வதாக கூறி மூதாட்டியிடம் 5 பவுன் நகை அபேஸ் - போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 29 May 2018 11:00 PM GMT (Updated: 29 May 2018 10:38 PM GMT)

வந்தவாசியில் உடல் நலம் பெற வேண்டி பூஜை செய்வதாக கூறி மூதாட்டியிடம் 5 பவுன் நகையை அபேஸ் செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

வந்தவாசி,

வந்தவாசி நகரில் சேத்துப்பட்டு சாலையில் உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி பட்டம்மாள் (வயது 65). இவர்களுடைய மகன் சிவகுமார். பட்டம்மாள் நீண்ட நாட்களாக இடுப்பு மற்றும் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் பட்டம்மாள் தனியாக வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் தன்னை மந்திரவாதி என்றும், உங்களுக்கு உடலில் வலிகள் இருப்பது குறித்து தகவல் அறிந்து இங்கு வந்தேன். பரிகார பூஜைகள் செய்தால் வலி நிவாரணம் பெறலாம் என்று கூறி உள்ளார்.

இதனை நம்பிய பட்டம்மாள் அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அந்த நபர் பட்டம்மாளிடம் ஒரு சொம்பு கொண்டு வரச்சொல்லி அதில் நீர் நிரப்பும்படி கூறியுள்ளார். அதில் நீர் நிரப்பியவுடன் பரிகார பூஜைகள் செய்வதற்கு உடலில் நகைகள் இருக்கக் கூடாது. எனவே நகைகளை கழற்றி இந்த சொம்புக்குள் போட்டு விடுங்கள் என கூறியுள்ளார். இதையடுத்து பட்டம்மாள் தான் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி மற்றும் 3 பவுன் சங்கிலி என மொத்தம் 5 பவுன் சங்கிலிகளை கழற்றி சொம்புக்குள் போட்டுள்ளார்.

சில நிமிடங்கள் அந்த நபர் பூஜைகள் செய்ததாக தெரிகிறது. பின்னர் குளியலறை சென்று கை, கால்களை கழுவிக் கொண்டு வாருங்கள் என பட்டம்மாளிடம் கூறினார். இதையடுத்து பட்டம்மாள் பூஜை அறையை விட்டு வெளியே சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர் 5 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு மாயமாய் மறைந்து போனார்.

பின்னர் பூஜை அறைக்கு வந்த பட்டம்மாள் அங்கு இருந்த நபரும், சொம்புக்குள் இருந்த நகைகளும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார். அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஓடி சென்று அவரிடம் விசாரித்த போது நடந்த சம்பவத்தை கூறி நகையுடன் மர்ம நபர் ஓடி விட்டதையும் கூறினார். இதுகுறித்து தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் மற்றும் போலீசார் பட்டம்மாள் வீட்டுக்கு விரைந்து சென்று மந்திரவாதி என கூறி பரிகார பூஜை செய்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story