11 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு தாவ திட்டம்


11 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு தாவ திட்டம்
x

மந்திரி பதவி கிடைக்காவிட்டால் காங்கிரசை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு தாவ திட்டமிட்டுள்ளதாக குமாரசாமியிடம், உளவுத்துறை அறிக்கை வழங்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் முழு பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதியிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி கூட்டணி 38 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேர்தலுக்கு பிறகு காங்கிரசும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்தன. மேலும் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் அந்த கூட்டணியின் பலம் 118 ஆக உயர்ந்தது.

பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோரின. எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து குமாரசாமி கடந்த 23-ந் தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். துணை முதல்-மந்திரியாக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 25-ந் தேதி நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபித்தார்.

ஆனால் மந்திரிசபை இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. முதல்-மந்திரி பதவி உள்பட மொத்தம் உள்ள 34 மந்திரி பதவிகளில் 22 பதவிகள் காங்கிரசும், 12 மந்திரி பதவிகளை ஜனதா தளம்(எஸ்) கட்சியும் பகிர்ந்து கொண்டன. ஆனால் இலாகாக்களை பகிர்ந்து கொள்வதில் இருகட்சிகள் இடையே இழுபறி ஏற்பட்டு வருகிறது. இதனால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

காங்கிரசில் மந்திரி பதவிக்கு கடும் போட்டி எழுந்துள்ளது. மந்திரி பதவி கிடைக்காவிட்டால், கட்சியை விட்டு விலகுவதாக சில எம்.எல்.ஏ.க்கள் மிரட்டி வருவதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை மந்திரி பதவி கிடைக்காத பட்சத்தில் பா.ஜனதாவில் சேர காங்கிரசை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் தயாராக இருப்பதாக தற்போது முதல்-மந்திரி குமாரசாமியிடம் மாநில உளவுத்துறை அறிக்கை வழங்கி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த எம்.எல்.ஏ.க்கள் தற்போது கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை துணை முதல்-மந்திரி பரமேஸ்வரிடம் குமாரசாமி தெரிவித்து இருக்கிறார். இதை காங்கிரஸ் மேலிட தலைவர் களிடம் பரமேஸ்வர் கூறி இருக்கிறார். இதனால் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதன் காரணமாக மந்திரிசபை விரிவாக்கம் மேலும் சில நாட்கள் தள்ளிப்போகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மூத்த எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவியை வழங்கவும், மற்ற எம்.எல்.ஏ.க் களுக்கு கட்சியில் முக்கியமான பதவியை வழங்கி சமாதானப்படுத்தவும் காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Next Story