குழித்துறையில் பரிதாபம் வேன் கதவில் துப்பட்டா சிக்கி பெண் சாவு


குழித்துறையில் பரிதாபம் வேன் கதவில் துப்பட்டா சிக்கி பெண் சாவு
x
தினத்தந்தி 30 May 2018 11:15 PM GMT (Updated: 30 May 2018 3:13 PM GMT)

குழித்துறையில், வேன் கதவில் துப்பட்டா சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

களியக்காவிளை,

கேரள மாநிலம் நெய்யாற்றின் கரையை அடுத்த உதயன்குளங்கரை பகுதியை சேர்ந்தவர் ரவி(வயது 45). இவர் காரோடு பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மஞ்சு(40). இவர் குழித்துறையை சேர்ந்தவர். இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது.

 சம்பவத்தன்று காலையில் மஞ்சு திற்பரப்பு பகுதியை சேர்ந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். பின்னர், தனது தாயார் வீட்டிற்கு செல்வதற்காக களியல் சந்திப்பில் இருந்து வேனில் குழித்துறைக்கு சென்றார். குழித்துறை நீதிமன்ற சந்திப்பை அடுத்துள்ள பெற்றோர் வீட்டின் அருகே வேனில் இருந்து இறங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அவர் அணிந்திருந்த துப்பட்டா வேன் கதவில் சிக்கிக்கொண்டது.

சுதாரித்துக்கொண்ட மஞ்சு, துப்பட்டாவை இழுத்து எடுப்பதற்குள் வேன் திடீரென்று கிளம்பியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மஞ்சுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மஞ்சு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story