மின்வாரிய அலுவலகத்தில் சீட்டு விளையாடிய 4 ஊழியர்கள் பணியிடை நீக்கம்
எண்ணூர் மின்வாரிய அலுவலகத்தில் சீட்டு விளையாடிய 4 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
திருவொற்றியூர்,
சென்னை எண்ணூரில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது. இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் தொலைபேசி மூலம் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், அலுவலகத்தில் ஆட்கள் இல்லை என்றும் பதில் அளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் எண்ணூர் மின்வாரிய அலுவலகத்துக்கு நேரில் புகார் அளிக்க சென்றனர். அப்போது பணியில் இருந்த மின்வாரிய ஊழியர்கள் அலுவலகத்தின் உள்ளே சீட்டு விளையாடிக்கொண்டு இருந்தனர்.
இதை ஒருவர் செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இது வைரலாக பரவியதை தொடர்ந்து தண்டையார்பேட்டை மின் வாரிய செயற்பொறியாளர், சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இதையடுத்து வேலை நேரத்தில் அலுவலகத்தில் சீட்டு விளையாடிய வயர்மேன் பெருமாள், பணியாளர்கள் கமலநாதன், நேதாஜி, முனுசாமி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.