திருப்பூரில் வேன் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தபோது பரிதாபம்


திருப்பூரில் வேன் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 6 Jun 2018 11:54 PM GMT (Updated: 6 Jun 2018 11:54 PM GMT)

திருப்பூரில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த 8-ம் வகுப்பு மாணவன் வேன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானான்

அனுப்பர்பாளையம்,

திருப்பூரில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த 8-ம் வகுப்பு மாணவன் வேன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானான்

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர்-அவினாசி ரோடு அம்மாபாளையத்தை அடுத்த ராக்கியாபாளையம் நெசவாளர் குமரன் காலனியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய இளைய மகன் முரளிகிருஷ்ணன் (வயது 13). 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முரளிகிருஷ்ணன் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் பள்ளிக்கு போகாமல் விடுமுறை எடுத்துள்ளான். இதனால் அவனும் அவனுடைய அண்ணனும் மோட்டார்சைக்கிளில் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அம்மாபாளையம் ராக்கியாபாளையம் சாலையில் உள்ள ரேஷன் கடை அருகே சென்ற போது திடீரென ஒரு மொபட் குறுக்கே வந்தது. இதனால் மொபட்டும், மோட்டார்சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து முரளிகிருஷ்ணன் நிலை தடுமாறி ரோட்டில் விழுந்தான்.

அப்போது பின்னால் வேகமாக வந்த சரக்கு வேனின் சக்கரத்தில் முரளிகிருஷ்ணன் சிக்கினான். இதில் அவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தான். இது குறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முரளிகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக சரக்கு வேன் டிரைவரான ஈரோடு திண்டல் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (46) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த மாணவன் மீது சரக்கு வேன் ஏறியதில் சம்பவ இடத்திலேயே மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story