ரவுடியை போலீசார் காவலில் எடுத்து விசாரணை


ரவுடியை போலீசார் காவலில் எடுத்து விசாரணை
x
தினத்தந்தி 7 Jun 2018 10:00 PM GMT (Updated: 7 Jun 2018 6:50 PM GMT)

தொழில் அதிபரை வெட்டிய வழக்கில் ரவுடி யை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் நாகலூத்துமேடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். பட்டு வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் பிரபல ரவுடியான சின்ன காஞ்சீபுரம் பொய்யாகுளம் பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவர் தனது நண்பர்களை அனுப்பி ரூ.10 லட்சம் கேட்டதாக தெரிகிறது. தொழிலதிபர் சரவணன் பணம் கொடுக்க மறுத்தார். அதனால் அவரை தியாகராஜனின் நண்பர்கள் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.

இது குறித்து பட்டு தொழிலதிபர் சரவணன், சின்ன காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபல ரவுடி தியாகராஜனின் நண்பர்கள் 4 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் பிரபல ரவுடி தியாகராஜன் தலைமறைவாக இருந்தார். பின்னர் அவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அதையொட்டி சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டு மூலம் பிரபல ரவுடி தியாகராஜனை ஒரு நாள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கூறினார். அதையொட்டி கோர்ட்டு, ரவுடி தியாகராஜனை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. அதையொட்டி இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையில் போலீசார் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி தியாகராஜனை நேற்று முன்தினம் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு காலை முதல் இரவு வரை துருவி துருவி விசாரித்தார்.

விசாரணையில், தொழிலதிபரிடம் பணம் கேட்டு நான்தான் என்னுடைய நண்பர்களை அனுப்பி வைத்தேன். பணம் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று கூறி இருந்தேன். தனக்கு எதிராக காஞ்சீபுரம் கோட்டத்தில் 9 கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள், 5 ஆள் கடத்தல் வழக்குகள் உள்ளன. மேலும், விழுப்புரத்தில் நடைபயிற்சி சென்ற ஒரு தி.மு.க. பிரமுகரை கொலை செய்ததாகவும், கும்பகோணத்தில் ஒரு கொலை செய்ததாகவும் ரவுடி தியாகராஜன் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசுவிடம் தெரிவித்தார்.

இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ரவுடி தியாகராஜனிடம் வாக்குமூலமாக எழுதி வாங்கினார். விசாரணை முடிந்து நேற்று தியாகராஜன் மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story