ரூ.8¼ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் மலேசிய பெண் சிக்கினார்


ரூ.8¼ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் மலேசிய பெண் சிக்கினார்
x
தினத்தந்தி 7 Jun 2018 11:00 PM GMT (Updated: 7 Jun 2018 7:05 PM GMT)

திருச்சி விமான நிலையத்தில் ரூ.8 ¼ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மலேசிய பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, கொழும்பு, சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் ஒரு சிலர் தங்கம், வெளிநாட்டு கரன்சிகள் போன்றவற்றை கடத்தி வருகின்றனர். இதனால், விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக சோதனை செய்த பிறகே வெளியே செல்ல அனுமதிக்கின்றனர்.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க டாலர் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ரூ.80 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்ததாக மலேசிய பெண் உள்பட 2 பேர் சிக்கினர்.

இந்நிலையில், மலேசியாவிலிருந்து நேற்று காலை திருச்சி வந்த தனியார் விமானம் ஒன்றில் வந்த பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மலேசியாவை சேர்ந்த தேவசுபத்ரா என்ற பெண் தனது உள்ளாடையில் மறைத்து 268 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.8¼ லட்சம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த பெண்ணிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story