கோவில்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Jun 2018 9:00 PM GMT (Updated: 7 Jun 2018 7:36 PM GMT)

கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் தனியார் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களுக்கு வருங்கால வைப்புநிதி ஓய்வூதியம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள்

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தனியார் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெறும் ஓய்வூதியர்கள், மூடப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றிய மற்றும் விருப்ப ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியம் வழங்க வேண்டும். இந்த ஓய்வூதியர்களுக்கு பணப்பயன்களை உடனே வழங்க வேண்டும். இவர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு ஓய்வூதியம், பஞ்சப்படியை உயர்த்தி வழங்க வேண்டும்.

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் சமூகநல அமைப்புகள் சார்பில், கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

அதன்படி கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் நேற்று காலையில் பல்வேறு தொழிற்சங்கத்தினர் ரெயில்மறியல் போராட்டத்துக்கு முயன்றனர். போலீசார் அனுமதி மறுத்ததால் ரெயில் நிலைய வளாகத்தில் முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தமிழரசன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், 5–வது தூண் அமைப்பு தலைவர் சங்கரலிங்கம், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முற்றுகையிட்டவர்களிடம் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story