தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான அந்தோணி செல்வராஜின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு இறுதி ஊர்வலத்தில் திரைப்பட இயக்குனர் ஹரி பங்கேற்பு


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான அந்தோணி செல்வராஜின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு இறுதி ஊர்வலத்தில் திரைப்பட இயக்குனர் ஹரி பங்கேற்பு
x
தினத்தந்தி 7 Jun 2018 9:15 PM GMT (Updated: 7 Jun 2018 7:45 PM GMT)

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியான அந்தோணி செல்வராஜின் உடல் அவரது குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியான அந்தோணி செல்வராஜின் உடல் அவரது குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

துப்பாக்கி சூடு

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் 7 பேரின் உடல்கள் மறுபிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மீதமுள்ள ஜான்சி, ரஞ்சித்குமார், அந்தோணி செல்வராஜ், மணிராஜ், ஜெயராமன், கிளாஸ்டன் ஆகிய 6 பேரின் உடல்கள் ஐகோர்ட்டு உத்தரவுப்படி நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதில் அந்தோணி செல்வராஜை தவிர மற்ற 5 பேரின் உடல்களை அவர்களது குடும்பத்தினர் பெற்று சென்று அடக்கம் செய்தனர்.

அந்தோணி செல்வராஜின் உடலை நேற்று பெற்றுக் கொள்வதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது.

உடல் ஒப்படைப்பு

இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு அந்தோணி செல்வராஜின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உடல் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கிருஷ்ணராஜபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இஞ்ஞாசியார் ஆலயத்தில் உடலை வைத்து பிரார்த்தனை செய்யப்பட்டது.

பின்னர் அந்தோணி செல்வராஜின் உடல் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அந்த பகுதியில் உள்ள மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் திரைப்பட இயக்குனர் ஹரி, ஸ்டண்டு மாஸ்டர் சில்வா மற்றும் பொதுமக்கள், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Next Story