போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்


போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 7 Jun 2018 10:36 PM GMT (Updated: 7 Jun 2018 10:36 PM GMT)

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அவினாசி-சேவூர் சாலையை விரிவு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி ஒன்றியம் மிக முக்கிய பகுதியாகும். அவினாசிக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப சாலைகளோ, அடிப்படை வசதிகளோ இதுவரை மேம்படுத்தப்படாமலேயே இருந்து வருகிறது. இதில் அவினாசி-சேவூர் மெயின் ரோடு எப்போதும் போக்குவரத்து நெரிசலுடனேயே காணப்படுகிறது.

இந்த ரோட்டில் கச்சேரி வீதி மற்றும் அதையொட்டி உள்ள ரோட்டோரங்களில் கோர்ட்டு, அரசு ஆஸ்பத்திரி, தாலுகா அலுவலகம், அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகிறது. இதனால் எப்போதும் அந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்துமாக பரபரப்புடனேயே காணப்படும். பிரதான ரோடாக இருந்தாலும் குறுகிய நெடுஞ்சாலையாக இதுவரை தரம் உயர்த்தப்படவில்லை.

காலை மற்றும் மாலையில் அலுவலகம் மற்றும் பள்ளி நேரங்களில் இந்த ரோடுகளில் வாகனங்களில் போக்குவரத்து அதிகமாக இருந்து வருவதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. ஊராட்சியாக இருந்த போது போடப்பட்ட ரோடுகள் மேம் படுத்தப்படாமலே இருந்து வருவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இருவழி சாலையாக இருந்தாலும், சாலையின் நடுவே தடுப்பு சுவர் இல்லாததால் முந்தி செல்வதற்காக வாகனங்களை தாறுமாறாக ஓட்டி செல்கின்றனர்.

இதனால் அடிக்கடி பள்ளி மாணவ, மாணவிகள் கூட விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது.

அவினாசிக்குட்பட்ட பகுதிகளில் குடியேறும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் சாலைகள் அதற்கு ஏற்ப இதுவரை தரம் உயர்த்தப்படவில்லை. பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக இருந்து வருகிறது. இதில் அவினாசி-சேவூர் சாலை மிக முக்கியமானதாகும். இந்த சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. பொதுமக்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் ஏராளமானோர் தினந்தோறும் நீண்ட நேரம் காத்திருந்து இந்த சாலையை கடந்து செல்கின்றனர்.

கடந்த ஒருசில தினங்களுக்கு முன்பு ரோட்டை கடந்து செல்ல முயன்ற முதியவர் ஒருவர் வாகனம் மோதி இறந்துள்ளார். இதுபோல அடிக்கடி இந்த ரோட்டில் விபத்து நடந்து வருகிறது. கடந்த ஒருசில வருடங்களுக்கு முன்பு ஏதோ கடமைக்காக இந்த ரோடு சிறிய அளவு விரிவுபடுத்தப்பட்டது. ஆனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், இதற்கு நிரந்தர தீர்வு காணவும் அதிகாரிகள் இதுவரை முன்வரவில்லை.

இதனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த சாலையை விரிவு படுத்துவதுடன், சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைத்து இருவழிபாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் தினந்தோறும் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செய்ய வேண்டும். அப்போது தான் வாகன விபத்து ஏற்படாமல் தடுக்க முடியும். மேலும், சாலையை கடந்து செல்பவர்களும் பாதுகாப்புடன் நடந்து செல்ல வாய்ப்பாக இருக்கும்.

இது குறித்து பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் மனு கொடுத்தும் இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகளின் நலன் கருதி உடனடியாக சாலையை விரிவுபடுத்துவதுடன், சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story