ரத்தம் சொட்டச்சொட்ட மோட்டார் சைக்கிளில் தப்பி வந்த வாலிபர் ஆஸ்பத்திரியில் அனுமதி


ரத்தம் சொட்டச்சொட்ட மோட்டார் சைக்கிளில் தப்பி வந்த வாலிபர் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 7 Jun 2018 11:01 PM GMT (Updated: 7 Jun 2018 11:01 PM GMT)

மதுரையில் கொலை வெறிக்கும்பலால் வெட்டப் பட்ட வாலிபர் ரத்தம் சொட்டச்சொட்ட உயிர் பிழைக்க மோட்டார் சைக்கிளில் தப்பி வந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை,

மதுரை ஆத்திக்குளத்தை சேர்ந்தவர் கார்த்திக் என்ற பன்னி கார்த்திக்(வயது 30). இவருக்கு அந்த பகுதியில் உள்ள ரவுடிகளிடம் பழக்கம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆத்திக்குளத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் காந்திபுரம் பகுதியில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் பாட்டில் மணி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். தினேஷ் கொலை வழக்கில் கார்த்திக்கிற்கு தொடர்பு இருந்ததும், அவர் தான் கொலைக்கு காரணமாக இருந்தார் என்றும் தினேஷ் தம்பி சரவணனுக்கு தெரியவந்தது.

எனவே கார்த்திக்கை கொலை செய்ய அவர் முடிவு செய்தார். இந்தநிலையில் நேற்று கார்த்திக் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கனகவேல்நகர் மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் அவரை பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் திடீரென்று கார்த்திக்கின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி கீழே விழ வைத்தனர். பின்னர் அவர்கள் கார்த்திக்கை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங் களால் சரமாரியாக வெட்டினர். சத்தம் கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் கூடியதும், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

அரிவாளால் வெட்டப்பட்டு ரத்தம் சொட்டச் சொட்ட கார்த்திக் தன்னை காப்பாற்றுமாறு அங்கிருந்தவர்களிடம் கெஞ்சினார். யாரும் உதவ முன்வரவில்லை என்பதால், அவரே தான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு ஆத்திக்குளம் புதூர் வண்டி பாதை மெயின் ரோட்டில் சென்றார். அந்த பகுதியில் சி.பி.ஐ. அலுவலகம் திறப்பு விழா நடந்ததால் போலீசார் அந்த சாலையில் பெருமளவில் பாதுகாப்பு பணியில் இருந்தனர். போலீசாரை பார்த்தும் கார்த்திக் மோட்டார் சைக்கிளை நிறுத்தி தன்னை கொலை செய்ய வருகிறார்கள், என் உயிரை காப்பாற்றுங்கள் என்று கூறினார்.

இதைதொடர்ந்து அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரியில் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முன்வரவில்லை. எனவே கார்த்திக் போன் மூலம் அவரது தம்பிக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பின்னர் போலீசார் அவரை ஆட்டோவில் ஏற்றி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சரவணன் உள்பட 6 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அரிவாளால் வெட்டப்பட்ட வாலிபர் மோட்டார் சைக்கிளில் ரத்தம் சொட்டிய நிலையில் வந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story