பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 7 Jun 2018 11:12 PM GMT (Updated: 7 Jun 2018 11:12 PM GMT)

ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் ராஜா தினகர் ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மற்றும் தேசிய பசுமைப்படை ஆகியவற்றின் சார்பில் பிளாஸ்டிக் மாசுவை முறியடிப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ராஜா தினகர் உயர்நிலைப்பள்ளியில் தொடங்கிய இந்த பேரணி, சிகில் ராஜவீதி, செய்யது அம்மாள் மருத்துவமனை, வண்டிக்கார தெரு, அரண்மனை சாலை வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. இதில் மாணவ-மாணவிகள் 900-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பிளாஸ்டிக் தவிர்ப்போம், மண்வளம் காப்போம், மரம் வளர்ப்போம் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பேரணியில் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட வனஉயிரின காப்பாளர் அசோக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் பிரேம், ஆரோக்யா மருத்துவமனை மருத்துவர்கள் பரணிக்குமார், வித்யா பரணிக்குமார், தேசிய பசுமைப்படை ராமநாதபுரம் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட் உள்பட தலைமைஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தேசிய பசுமை படையின் ஒன்றிய பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story