குண்டும், குழியுமாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் அவதி


குண்டும், குழியுமாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 7 Jun 2018 11:48 PM GMT (Updated: 7 Jun 2018 11:48 PM GMT)

கூடலூர் அருகே பெருமாள்கோவில் புலம் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கூடலூர்,

கூடலூர் மந்தைவாய்க்கால் பாலத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் பெருமாள்கோவில் புலம் உள்ளது. இங்கு உள்ள மானாவாரி நிலங்களில் எள், நிலக்கடலை, தட்டைப்பயறு, அவரை, மொச்சை, கம்பு, சோளம் ஆகியவற்றை பயிரிட்டு வருகின்றனர். மேலும் வாழை, தென்னை, திராட்சை, வெங்காயம், மா உள்ளிட்ட பணப்பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர்.

கூடலூரில் இருந்து பெருமாள்கோவில் புலம் செல்லும் சாலை வழியாக கூலிவேலைக்கு மினி ஆட்டோக்களில் தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். விளைப்பொருட்களை மாட்டுவண்டிகள் மற்றும் டிராக்டர்களில் சந்தைகளில் விற்பதற்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். இதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது.

பெருமாள்கோவில் புலம் செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் தோட்டங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை கொண்டு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு வழங்கினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

எனவே, பெருமாள் கோவில் புலம் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்் என்று அப்பகுதி விவசாயிகளும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story