காட்டு யானைகளை மிரட்டுமா தேனீ கூடு வேலி?


காட்டு யானைகளை மிரட்டுமா தேனீ கூடு வேலி?
x
தினத்தந்தி 8 Jun 2018 5:47 AM GMT (Updated: 8 Jun 2018 5:47 AM GMT)

காட்டுக்கு ராஜாவாக சிங்கம் இருந்தாலும், வனவிலங்குகளை மட்டுமின்றி நம்மையும் மிரள வைக்கும் கம்பீர தோற்றம் யானைகளுக்கு தான் உண்டு.

வனப்பகுதியில் வலம் வரும் யானைகளுக்கு ஆக்ரோஷ குணம் அதிகமாக இருக்கும்.

வனப்பகுதியில் தனியாகவும், கூட்டம், கூட்டமாகவும் யானைகள் வலம் வரும். இந்த யானைகளுடன், மலையடிவார மக்கள் மல்லு கட்டுவது தொடர்கதையாகி விட்டது. யானைகளிடம் சிக்கி தங்களது இன்னுயிரை சிலர் இழந்துள்ளனர்.

வனவிலங்குகளில் யானைகளால் ஏற்படும் உயிர், பொருள் இழப்பு ஏராளம். தமிழகத்தில் திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, கோவை, நெல்லை உள்ளிட்ட வனப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்கு புகுந்து அட்டகாசம் செய்யும் யானைகளை கட்டுப்படுத்துவது வனத்துறையினருக்கும், மலையடிவார விவசாயிகளுக்கும் கடும் சவாலாக இருக்கிறது.

அகழிகள் வெட்டியும், மின்வேலிகள் அமைத்து தடுப்பதும், பட்டாசு வெடித்து யானைகளை விரட்டுவதும் நடைமுறையில் உள்ளது. ஆனால், தற்போது இயற்கையான முறையில் யானைகளை விரட்ட தமிழக வனத்துறை முடிவு செய்துள்ளது. தேனீக்கள் மூலம் யானைகளை விரட்ட களம் இறங்கியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சட்டசபையில் சமீபத்தில் அறிவித்தார். அதாவது, தேனீ கூடுகள் மூலம் வேலி அமைத்து யானைகளை விரட்டும் புதுமையான திட்டம் தான் அது.

முதற்கட்டமாக, கோவை வனக்கோட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதியில் உள்ள 120 கிலோமீட்டர் தூரத்துக்கு தேனீ கூடு வேலிகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, ரூ.1 கோடியே 28 லட்சம் செலவிடப்பட உள்ளது. உருவத்தில் பெரிதாக இருந்தாலும் சிறிய தேனீக்களின் ரீங்கார சத்தத்தை கேட்டு யானைகள் ஓட்டம் பிடிக்க தான் செய்யும்.

ஆனால், அதற்காக யானைகளை விரட்டுவதற்கு தேனீக்களை முழுமையாக பயன்படுத்துவது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. ஏனெனில், வேலி அமைக்கும் அளவுக்கு தேனீக்களை ஒன்று சேர்ப்பது எளிதான காரியம் இல்லை. முதலில், தேனீக்கள் உற்பத்தியை பெருக்க வேண்டும். இதற்கு, பூத்து குலுங்கும் பூக்கள் தேவை. வேலி அமைக்கும் இடத்தில் பூக்கள் இருந்தால் மட்டுமே தேனீக்கள் ஒரே இடத்தில் இருக்கும். இல்லையெனில், தேனீக்கள் வனத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பூக்களை தேடி சென்று விடும்.

தமிழக வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வகையான தேனீக்கள் உள்ளன. ஒவ்வொன்றும், ஒவ்வொரு வித தட்பவெப்ப நிலையில் உயிர் வாழும் தன்மை கொண்டது. எந்த வனப்பகுதியில், எந்த வகை தேனீக்களை வேலியாக பயன்படுத்த வேண்டும் என்பதை முதலில் வனத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். இதனை கண்டுபிடித்த பிறகே வேலி அமைக்க வேண்டும். இல்லையெனில், தேனீக்களை தேடி பிடித்து வேலியாக அமைப்பதே வனத்துறைக்கு பெரிய வேலையாகி விடும்.

தேனீக்களால் வேலி அமைப்பது எப்படி? என்ற கேள்வி தமிழக மக்களுக்கு மட்டுமின்றி வனத்துறையினருக்கும் எழுந்துள்ளது. தேனீக்கள் மூலம் யானைகளை விரட்டும் திட்டம், ஆப்பிரிக்க நாடான கென்யாவில் சோதனை அடிப்படையில் நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அங்குள்ள டிசோவோ கிழக்கு பகுதியில் தேசிய பூங்கா அமைந்துள்ளது.

வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், பூங்கா பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்த பயிர்களை நாசம் செய்தன. இதனை தடுக்க நிலங்களை சுற்றிலும் குறிப்பிட்ட இடைவெளியில் தேனீக்களை பூங்கா நிர்வாகத்தினர் வளர்க்க தொடங்கினர். கயிறு கட்டி, அதில் தேனடைகளை பெட்டிகளில் கொக்கிகள் மூலம் பொருத்தினர். இந்த கயிறு, தோட்டத்தை சுற்றிலும் 2 வரிசையாக ஒன்றன்கீழ் ஒன்றாக அமைக்கப்பட்டன.

10 மீட்டர் இடைவெளியில் தேனடை பெட்டிகள் வைக்கப்பட்டன. வனத்தில் இருந்து வெளியேறும் யானை, கயிற்றை தொட்டவுடன் தேனீக்கள் பறந்தன. அதன் ரீங்கார சத்தத்தை கேட்டு யானைகள் ஓட்டம் பிடித்தன. இந்த முயற்சியே, தேனீ கூடு வேலி என்ற புதிய திட்டம் உருவாக காரணமாக அமைந்தது. இது, தமிழகத்துக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே புதுமையான திட்டம் தான்.

அகழி, மின்வேலிக்கு அடங்காத யானைகள் தேனீ கூடு வேலிக்கு மிரளுமா? என்பது தான் இன்றைய கேள்வி. எனவே தேனீ கூடு வேலி அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு, அதனை பற்றிய ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இதற்கான முயற்சியில் வனத்துறையினர் முதலில் ஈடுபட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள சில வனப்பகுதிகளை தேர்வு செய்து, அங்கு சோதனை அடிப்படையில் தேனீ கூடு வேலி அமைக்க வேண்டும். மனித-யானை மோதலை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. அதற்காக, இதுபோன்ற விபரீத முயற்சியில் ஈடுபடக்கூடாது. ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது. அப்படி களம் இறங்கும் பட்சத்தில், வைகை அணையில் தண்ணீர் நீராவியாவதை தடுக்க, தெர்மோகோல் விட்ட கதையாகி விடும் என்பதில் அய்யமில்லை.

-தாமிரன்  

Next Story