மோட்டார் சைக்கிள் கேட்டதில் தகராறு: வாலிபரை கத்தியால் குத்திய பெண்


மோட்டார் சைக்கிள் கேட்டதில் தகராறு: வாலிபரை கத்தியால் குத்திய பெண்
x
தினத்தந்தி 8 Jun 2018 10:15 PM GMT (Updated: 8 Jun 2018 6:57 PM GMT)

விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை பெண் ஒருவர் கத்தியால் குத்தினார்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே உள்ள ஆலிச்சிக்குடியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30). இவரது மனைவி பொன்னி(27). சக்திவேல் நேற்று முன்தினம் வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். அதன் பின்னர் அதே பகுதியை சேர்ந்த உறவினரான தேவேந்திரன் மகன் அன்பரசன்(20) என்பவர், சக்திவேலின் வீட்டுக்கு சென்றார்.

அப்போது அங்கு தனியாக இருந்த பொன்னியிடம் சக்திவேலின் மோட்டார் சைக்கிளை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பொன்னி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே இது குறித்து அறிந்த பொன்னியின் தந்தை பட்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி(55), அன்பரசனை ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது.

இதையடுத்து அன்பரசன் பொன்னியின் வீட்டுக்கு சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த பொன்னி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அன்பரசனின் முதுகில் குத்தினார். இதில் அவரது விலா எலும்பில் கத்தி சொருகிக் கொண்டது. இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அன்பரசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் முதுகில் குத்தியிருந்த கத்தியை அகற்ற முடியாமல் டாக்டர்கள் திணறினர். இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அன்பரசனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார், பொன்னியையும், அவரது தந்தை கிருஷ்ணசாமியையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story