ஊட்டி தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக்ஐவர் கல்லறையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி


ஊட்டி தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக்ஐவர் கல்லறையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி
x
தினத்தந்தி 8 Jun 2018 10:30 PM GMT (Updated: 8 Jun 2018 7:25 PM GMT)

ஊட்டி தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக்ஐவர் நினைவு தினத்தையொட்டி, அவரது கல்லறையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஊட்டி,

இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது, அவர்களுடைய சிறந்த கோடை வாசஸ்தலமாக நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி நகரம் விளங்கியது. இங்கிலாந்து நாட்டில் நிலவும் சீதோஷ்ண நிலை ஊட்டியிலும் நிலவியது. இதனால் ஆங்கிலேயர்கள் ஊட்டியில் கலெக்டர் அலுவலகம், பிரிக்ஸ் பள்ளி, லாரன்ஸ் பள்ளி, புனித ஸ்டீபன் ஆலயம், புனித தாமஸ் ஆலயம் உள்பட பல்வேறு கட்டிடங்களை வடிவமைத்தனர். இவை இங்கிலாந்தில் உள்ளது போல் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை மெக்ஐவர் என்ற ஆங்கிலேயர் உருவாக்கினார்.

அவர் ஊட்டியில் தாவரவியல் பூங்கா அமைவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். கடந்த 1848–ம் ஆண்டு பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது பூங்காவில் நடவு செய்வதற்காக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பல்வேறு வகையான மலர் செடிகள் மற்றும் மரக்கன்றுகளை மிகுந்த சிரமங்களுக்கு இடையே மெக்ஐவர் ஊட்டிக்கு கொண்டு வந்தார். அந்த காலகட்டத்தில் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத நேரத்தில், வெளிநாடுகளில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்ட விதைகள், மலர் செடிகள் மற்றும் மரக்கன்றுகளை பூங்காவில் நட்டு வளர்த்தார். அவர் பூங்காவில் பெரிய புல்வெளி மைதானத்தையும் அமைத்தார்.

19 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பிறகு ஊட்டி தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட்டது. பூங்கா அமைப்பதற்கான பணிகள் கடந்த 1867–ம் ஆண்டு நிறைவடைந்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கியதில் மெக்ஐவரின் பங்களிப்பு முக்கியமானது ஆகும். ஊட்டியில் சில ஆண்டுகள் வாழ்ந்த மெக்ஐவர் கடந்த 1876–ம் ஆண்டு ஜூன் மாதம் 8–ந் தேதி இறந்து விட்டார். அவரது உடல் ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் அருகே புனித ஸ்டீபன் ஆலயத்தின் பின்புறம் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக்ஐவரின் 142–வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மெக்ஐவரின் கல்லறையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து புனித ஸ்டீபன் ஆலய குருவானவர் ரமேஷ்பாபு பிரார்த்தனை செய்தார். இதில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) சிவசுப்ரமணியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுபோன்று ஊட்டி நகராட்சியின் முதல் ஆணையாளராக கடந்த 1868–ம் ஆண்டு பிரிக்ஸ் என்பவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்டார். இவர் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டார். ஊட்டியில் பிரிக்ஸ் பள்ளியை நிறுவினார். பின்னர் 1872–ம் ஆண்டு ஜூன் 6–ந் தேதி இறந்தார். இவரது உடல் புனித ஸ்டீபன் ஆலய கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவுநாளை நினைவுகூரும் வகையிலும், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, பிரிக்ஸ் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


Next Story