வத்தலக்குண்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி அக்காள்-தம்பி பலி: கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தபோது பரிதாபம்


வத்தலக்குண்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி அக்காள்-தம்பி பலி: கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 8 Jun 2018 11:30 PM GMT (Updated: 8 Jun 2018 7:34 PM GMT)

வத்தலக்குண்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் அக்காள்-தம்பி பலியாகினர். கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

வத்தலக்குண்டு, 

விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சென்னையை அடுத்த மதுராந்தகத்தை சேர்ந்தவர் லோகநாதன். அவருடைய மகன் பிரதாப் (வயது 21). இவர், அங்குள்ள ஒரு ஜூஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். அவருடைய சித்தப்பா மகன் மெர்வின் (26), அவருடைய தங்கை கவுசல்யா (23). மெர்வினின் தோழி கயல்விழி (23). இவர் கள் 4 பேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

அதன்படி 4 பேரும், 2 மோட்டார் சைக்கிளில் நேற்று காலை கொடைக்கானலுக்கு புறப்பட்டனர். ஒரு மோட்டார் சைக்கிளை பிரதாப் ஓட்ட, பின்னால் கவுசல்யா அமர்ந்திருந்தார். இதேபோல் மற்றொரு மோட்டார் சைக்கிளை மெர்வின் ஓட்ட தோழி கயல்விழி உடன் சென்றார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில், கன்னிமார் கோவில் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது பெரியகுளத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி கியாஸ் சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரி, எதிர்பாராத விதமாக பிரதாப் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் நொறுங்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரதாப்பும், கவுசல்யாவும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதற்கிடையே மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்ற மெர்வின், கயல்விழி ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் பழனி மாரிமுத்துவை (40) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இடத்தில், மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி அக்காள்-தம்பி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story