பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் அதிக செக்ஸ் மாத்திரை கொடுத்து கொன்றேன் கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்


பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் அதிக செக்ஸ் மாத்திரை கொடுத்து கொன்றேன் கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 8 Jun 2018 11:15 PM GMT (Updated: 8 Jun 2018 7:43 PM GMT)

துவரங்குறிச்சி அருகே கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் அடையாளம் தெரிந்தது. அவரை கொன்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் கொலை செய்ததாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

துவரங்குறிச்சி,

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த மலம்பட்டி அருகே உள்ள தச்சமலை வனப்பகுதியில் கடந்த மாதம் (மே) 29-ந் தேதி பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். சம்பவம் பற்றி தகவல் அறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் மற்றும் துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

முகம் சிதைக்கப்பட்டதால் இறந்த பெண்ணை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு கடும் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்தப் பெண் அணிந்திருந்த உடைகள், உள்ளாடை மற்றும் காலணி, தோடு இவைகளை தனியாக எடுத்து அதை துண்டு பிரசுரத்தில் அச்சடித்து பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். இதுமட்டுமின்றி முகநூல், வாட்ஸ் அப் என அனைத்து சமூக வலைதளங்களிலும் அனுப்பி அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இது ஒருபுறம் இருக்க மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆசைத்தம்பி, துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் அப்துல் கபூர், சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜ், தனிப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படையினர் திண்டுக்கல், நத்தம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இறந்த பெண் அணிந்திருந்த உடைகளை பார்க்கும் போது, அவர் திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் போல் தெரிகின்றது என்று ஒரு பெண் அடையாளம் கூறவே உடனே தனிப்படை போலீசார் திண்டுக்கல் விரைந்தனர். அப்போதுதான் குடும்பத்தினருக்கும் அந்தப் பெண்ணிற்கும் எந்த தொடர்பும் சமீபகாலமாக இல்லை என்பதும், இரு திருமணங்கள் நடைபெற்று ஒரு கணவர் இறந்து விட்ட நிலையில் மற்றொரு கணவரையும் பிரிந்து அந்தப் பெண் வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து கடைசியாக அந்த பெண் எந்த பகுதியில் பணியாற்றினார் என்பதை விசாரித்த போது திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் ஒரு தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் அந்தப் பெண் வேலை பார்த்ததும், சமீபத்தில் அந்த கடை மூடப்பட்ட நிலையில் ஒரு அறையில் கள்ளக்காதலனுடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 47) என்பவர் நத்தம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் கூலிவேலை செய்து வந்ததும், அப்போது முருகனுக்கும் அந்தப் பெண்ணிற்கும் தொடர்பு ஏற்பட்டு இருவரும் நத்தம் பகுதியில் ஒரு அறை எடுத்து தங்கி, குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

பின்னர் போலீசார் முருகனை பிடித்து விசாரணை நடத்திய போது கீழ்கண்ட தகவல் தெரியவந்தது. இறந்த பெண் திண்டுக்கல் தொட்டனூத்து பகுதியைச் சேர்ந்த மலர்கொடி (35) என்றும், ஏற்கனவே 2 திருமணங்கள் நடைபெற்ற நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்ததோடு சிலருடன் கள்ளத் தொடர்பிலும் இருந்துள்ளார். கடைசியாகத்தான் முருகனுடன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 27-ந் தேதி மலர்கொடி முருகனிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதையடுத்து முருகன் இருவரும் வெளியில் செல்லலாம் என்று கூறி துவரங்குறிச்சி அருகே உள்ள பச்சமலை வனப்பகுதிக்கு அழைத்து வந்து இருவரும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். முருகன் அதிக செக்ஸ் மாத்திரை கொடுத்த தால் அதை சாப்பிட்ட மலர்கொடி சற்று மயக்க நிலையில் இருந்துள்ளார். இதையறிந்த முருகன் தன்னிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்து அவரின் முகத்தில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தை சிதைந்து விட்டு அங்கிருந்து சென்று விட்டதாக போலீசாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்து மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

கொலையான பெண் யார் என்று அடையாளம் தெரியாமல் இருந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக்கின் நேரடி மேற்பார்வையில் தனிப்படையினரின் தீவிர விசாரணைக்குப்பின், பெண்ணின் உடைகளை வைத்தே அவர் யார் என்று கண்டுபிடித்ததோடு மட்டுமின்றி குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை அனைவரும் பாராட்டினர்.

Next Story