11,12-ம் வகுப்புகளுக்கு போதுமான ஆசிரியர்கள் இல்லை மாணவ-மாணவிகள் குற்றச்சாட்டு


11,12-ம் வகுப்புகளுக்கு போதுமான ஆசிரியர்கள் இல்லை மாணவ-மாணவிகள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 Jun 2018 10:30 PM GMT (Updated: 8 Jun 2018 7:55 PM GMT)

குருவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11,12-ம் வகுப்புகளுக்கு போதுமான ஆசிரியர்கள் இல்லை என மாணவ-மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள குருவாடியில் அரசு மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. திருமானூர் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மாணவ-மாணவிகள் ஏராளமானோர் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு வரை உயர்நிலைப்பள்ளியாக இருந்த இந்த பள்ளி மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, 11 மற்றும் 12-ம் வகுப்பில் கணித பிரிவு மற்றும் கலைப்பிரிவு என இரண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதில் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட ஆண்டு மட்டும் தான் 11, 12-ம் வகுப்பு கணித பிரிவு, கலைப்பிரிவுக்கு அனைத்து ஆசிரியர்கள் பணியாற்றினர். ஆனால் தற்போது 11, 12-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்துவதற்கு போதுமான ஆசிரியர்கள் இல்லை என்று மாணவ-மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

கணித பிரிவில் கணக்கு பாடத்திற்கும், கலைப் பிரிவுக்கும் ஆசிரியர்கள் இல்லை என்றும் கூறப்படு கிறது. இதனால் 9, 10-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களே 11, 12-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்துகின்றனர் என்று கூறப்படுகிறது. பாடங்கள் நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லாததால் 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் பாடங்களை படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், தற்போது இந்த பள்ளியில் கணினி அறிவியல் பாடப்பிரிவு தொடங்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. எனவே இந்த அரசு பள்ளியில் 11,12-ம் வகுப்பில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள், அவரது பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story