சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 19 சதவீதம் கூலி உயர்வு நெல்லையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு


சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 19 சதவீதம் கூலி உயர்வு நெல்லையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு
x
தினத்தந்தி 8 Jun 2018 9:00 PM GMT (Updated: 8 Jun 2018 8:25 PM GMT)

சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 19 சதவீதம் கூலி உயர்வு வழங்கப்படும் என்று நெல்லையில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.

நெல்லை,

சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 19 சதவீதம் கூலி உயர்வு வழங்கப்படும் என்று நெல்லையில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.

பேச்சுவார்த்தை

சங்கரன்கோவில் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் 60 சதவீதம் கூலி உயர்வு கேட்டு கடந்த 40 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் தொடர் இழுபறி நீடித்து வந்தது.

இந்த நிலையில் நெல்லை பாளையங்கோட்டை திருமால் நகரில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. மதுரை தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர் பாலசந்திரன் தலைமை தாங்கினார். நெல்லை இணை ஆணையர் ஹேமலதா, உதவி ஆணையர் அப்துல் காதர் சுபையர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் சங்கரன்கோவில் மாஸ்டர் வியூவர் அசோசியேசன் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் டி.எஸ்.ஏ.சுப்பிரமணியன், பெருளாளர் முத்துசங்கரநாராயணன், தொழிலாளர்கள் சார்பில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் மாடசாமி, செயலாளர் ரத்தினவேலு, சிறுவிசைத்தறி சங்கம் திருமுருகன், முத்துசங்கரநாராயணன், புளிங்குடி தொழிற்சங்கம் வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

19 சதவீதம் கூலி உயர்வு

நேற்று நடந்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதாவது விசைத்தறி தொழிலாளர்கள், தொழிலாளர் சார்ந்த பாவு ஓட்டம், பசை போடுதல், சாயத்தொழில், மேஸ்திரி, வைண்டிங் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு 19 சதவீதம் கூலி உயர்வும், வீடு சார்ந்த ஒப்பந்த சிறு விசைத்தறி உரிமையாளர்களுக்கு 17 சதவீதம் கூலி உயர்வும் வழங்க முடிவு செய்யப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சங்கரன்கோவில் பகுதி விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதால் அவர்கள் உடனடியாக பணிக்கு திரும்புவதாக தெரிவித்து உள்ளனர்.


Next Story