பெங்களூருவில், தயாரிப்பாளர் தப்பி ஓட உதவிய வழக்கில் தலைமறைவு தமிழ்நாட்டில் பதுங்கி இருந்த நடிகர் துனியா விஜய் கைது


பெங்களூருவில், தயாரிப்பாளர் தப்பி ஓட உதவிய வழக்கில் தலைமறைவு தமிழ்நாட்டில் பதுங்கி இருந்த நடிகர் துனியா விஜய் கைது
x
தினத்தந்தி 8 Jun 2018 10:00 PM GMT (Updated: 8 Jun 2018 9:33 PM GMT)

பெங்களூருவில் தயாரிப்பாளர் தப்பி ஓட உதவிய வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகர் துனியா விஜய், தமிழ்நாட்டில் பதுங்கி இருந்த போது போலீசார் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு,

பெங்களூருவில் தயாரிப்பாளர் தப்பி ஓட உதவிய வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகர் துனியா விஜய், தமிழ்நாட்டில் பதுங்கி இருந்த போது போலீசார் கைது செய்யப்பட்டார். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தயாரிப்பாளருக்கு பிடிவாரண்டு

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் துனியா விஜய். இவர், மாஸ்திகுடி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு(2017) பெங்களூரு புறநகர் தாவரகெரேயில் உள்ள ஏரியில் வைத்து நடைபெற்றது. அங்கு சண்டை காட்சியை படம் பிடித்தபோது ஏரியின் மேலே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரில் இருந்து வில்லன் நடிகர்களான அனில் மற்றும் உதய் தண்ணீருக்குள் குதித்தனர். அதுபோல, நடிகர் துனியா விஜயும் ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதித்தார்.

ஆனால் எதிர்பாராத விதமாக ஏரியில் மூழ்கி வில்லன் நடிகர்களான அனில் மற்றும் உதய் பரிதாபமாக உயிர் இழந்தார்கள். இதுகுறித்து தாவரகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் மாஸ்திகுடி படத்தின் தயாரிப்பாளரான சுந்தர்கவுடாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கடந்த மாதம்(மே) ராமநகர் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, மே 30–ந் தேதி சுந்தர்கவுடாவை கைது செய்ய பெங்களூரு சி.கே.அச்சுக்கட்டு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு தாவரகெரே போலீசார் சென்றனர்.

துனியா விஜய் மீது வழக்குப்பதிவு

முன்னதாக இதுபற்றி அறிந்த நடிகர் துனியா விஜய், சுந்தர்கவுடா வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கிருந்த போலீசாரிடம், சுந்தர்கவுடாவின் தாய்க்கு உடல் நிலை சரியில்லை, அதனால் நாளை(அதாவது மே 31–ந் தேதி) தானே போலீஸ் நிலையத்திற்கு அவரை அழைத்து வருவதாக துனியா விஜய் கூறினார். அந்த சந்தர்ப்பத்தில் வீட்டின் பின்பக்க காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து சுந்தர்கவுடா தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து, தயாரிப்பாளர் சுந்தர்கவுடா தப்பி ஓடுவதற்கு துனியா விஜய் உதவி செய்ததாகவும், போலீசாரை பணி செய்ய விடாமல் அவர் தடுத்ததாகவும் கூறி சி.கே.அச்சுக்கட்டு போலீஸ் நிலையத்தில், போலீஸ்காரர் கோவிந்தராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று பயந்து, நடிகர் துனியா விஜய் தலைமறைவாகி விட்டார்.

கோவையில் கைது

இதற்கிடையில், நடிகர் துனியா விஜய் தமிழ்நாடு கோயம்புத்தூரில் உள்ள ரெசார்ட் ஓட்டலில் தங்கி இருப்பதாக சி.கே.அச்சுக்கட்டு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் கோவைக்கு விரைந்து சென்றனர். இந்த நிலையில், ரெசார்ட் ஓட்டலில் பதுங்கி இருந்த துனியா விஜய் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசாரிடம் பிடிபட்டார். பின்னர் கோவையில் இருந்து நேற்று காலையில் நடிகர் துனியா விஜயை பெங்களூருவுக்கு போலீசார் அழைத்து வந்தனர். அதைத்தொடர்ந்து, தயாரிப்பாளர் தப்பி ஓடிய வழக்கில் நடிகர் துனியா விஜயை போலீசார் கைது செய்தார்கள்.

அதே நேரத்தில் துனியா விஜய் சார்பில், பெங்களூரு கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, நடிகர் துனியா விஜய்க்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, துனியா விஜய் கைது செய்யப்பட்டு சிறிது நேரத்திலேயே கோர்ட்டு உத்தரவுப்படி அவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தயாரிப்பாளர் சுந்தர்கவுடாவை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story