பெண் பத்திரிகையாளரிடம் செல்போன் பறித்தவனை பொதுமக்கள் விரட்டிப் பிடித்தனர்


பெண் பத்திரிகையாளரிடம் செல்போன் பறித்தவனை பொதுமக்கள் விரட்டிப் பிடித்தனர்
x
தினத்தந்தி 8 Jun 2018 10:31 PM GMT (Updated: 8 Jun 2018 10:31 PM GMT)

ரோட்டில் நடந்து சென்ற பெண் பத்திரிகையாளரிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்றவனை பொதுமக்கள் விரட்டிப்பிடித்தனர்.

அடையாறு,

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி கலைவாணி (வயது 27). இவர் பிரபல செய்தி தொலைக்காட்சியில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

கலைவாணி நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, சுமார் 8 மணி அளவில் ராயப்பேட்டை மாசிலாமணி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கலைவாணியிடம் இருந்த செல்போனை பறித்தனர். இதனால் அவர் கூச்சலிட்டார்.

விரட்டிப் பிடித்தனர்

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து, செல்போனுடன் தப்ப முயன்றவர்களை விரட்டிச் சென்றனர். அப்போது அவர்களில் ஒருவன் பிடிபட்டான். மற்றொருவன் சிக்காமல் தப்பிவிட்டான்.

பிடிபட்ட நபரை ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் ராயப்பேட்டையைச் சேர்ந்த அமர்நாத் (18) என்றும், தப்பியோடிய நபர் அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்றும் தெரிய வந்தது.

அமர்நாத்தை கைது செய்த போலீசார், கலைவாணியிடம் பறித்த செல்போனை மீட்டனர். வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய வினோத்தை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story