ரெயில் பயணிகளை தாக்கி செல்போன் பறித்த வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு


ரெயில் பயணிகளை தாக்கி செல்போன் பறித்த வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 8 Jun 2018 10:45 PM GMT (Updated: 8 Jun 2018 10:39 PM GMT)

ரெயில் பயணிகளை தாக்கி செல்போன் பறித்து வந்த வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மும்பை, 

ரெயில் பயணிகளை தாக்கி செல்போன் பறித்து வந்த வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

செல்போன் பறிப்பு

மும்பையை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவர், கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் லோயர் பரேல் செல்ல மின்சார ரெயிலில் வாசற்படி அருகே நின்று செல்போனில் பேசியபடி பயணம் செய்தார். மாகிம் ரெயில் நிலையத்தை கடந்து ரெயில் செல்லும் போது, கீழே மின்கம்பம் அருகே நின்றுகொண்டிருந்த ஒருவர் தடியால் வாலிபரின் செல்போன் இருந்த கையில் தாக்கினார்.

இதனால் வாலிபரின் செல்போன் தவறி கீழே விழுந்தது. இதன்பின்னர் அந்த நபர் செல்போனை எடுத்துக்கொண்டு தப்பிஓடி விட்டார். இதனால் பாதிக்கப்பட்ட வாலிபர் சம்பவம் குறித்து ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.

5 ஆண்டு ஜெயில்

இந்த புகாரின்பேரில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில், தினேஷ் சவாரியா (வயது27) என்பவர் போலீசாரிடம் சிக்கினார். இவர் ரெயில் பயணிகளை தாக்கி செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு மீதான விசாரணையின் போது தினேஷ் சவாரியா மீதான குற்றச்சாட்டு போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப் பட்டது. இந்தநிலையில் வழக்கின் விசாரணை நிறை வடைந்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில், வழக்கை விசாரித்த நீதிபதி, செல்போன் பறிப்பு கொள்ளையன் தினேஷ் சவாரியாவுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தார்.

Next Story