திருவொற்றியூரில் மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


திருவொற்றியூரில் மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2018 11:30 PM GMT (Updated: 8 Jun 2018 10:41 PM GMT)

திருவொற்றியூரில் மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர், 

திருவொற்றியூர் கங்கையம்மன் நகர் பிரதான சாலையில் அரசு மதுபானக்கடை உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி மூடப்பட்டு இருந்த இந்த மதுக்கடை கடந்த 2 நாட்களாக மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

குடியிருப்புகளுக்கு மத்தியில் இந்த மதுக்கடை அமைந்து உள்ளதால் பெண்கள், மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மது பிரியர்கள் போதை தலைக்கேறியதும், அந்த வழியாக செல்லும் பெண்களை ஆபாசமான கோணங்களில் செல்போனில் படம் பிடிப்பதாகவும், இதனால் அந்த வழியாக நடந்து செல்லவே அச்சமாக இருப்பதாகவும் பெண்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பொதுமக்களுக்கு இடையூறாக மீண்டும் திறக்கப்பட்டு உள்ள இந்த மதுக்கடையை மூடக்கோரி, கிராம தலைவர் அமிர்தராஜ் தலைமையில் திரளான பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மதியம் அந்த மதுக்கடையை முற்றுகையிட்டனர்.

அப்போது கடையை திறக்க வந்த ஊழியர்களை தடுத்து நிறுத்திய அவர்கள், மதுக்கடை முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த மதுக்கடையை மூடக்கோரி அவர்கள் கோஷமிட்டனர்.

கல்வீச்சு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்த பெண்களில் சிலர், பூட்டி இருந்த மதுக்கடை மீது ஆவேசமாக கல்வீசி தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த சாத்தாங்காடு போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மதுக்கடையை மூட உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். அதை ஏற்று ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். 

Next Story