ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் மக்கள் நலனை காக்க மத்திய– மாநில அரசுகள் தவறி விட்டன


ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் மக்கள் நலனை காக்க மத்திய– மாநில அரசுகள் தவறி விட்டன
x
தினத்தந்தி 9 Jun 2018 10:45 PM GMT (Updated: 9 Jun 2018 5:47 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் மக்கள் நலனை காக்க மத்திய– மாநில அரசுகள் தவறி விட்டன என நித்திரவிளையில், ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

நித்திரவிளை,

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக மத்திய– மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகத்தில் 6 இடங்களில் இருந்து பிரசார பயணம் மேற்கொண்டு திருச்சியை சென்றடைய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி குமரி மாவட்டத்தில் நித்திரவிளையில் இருந்து நேற்று காலையில் பிரசார பயணம் தொடங்கியது. நிகழ்ச்சியில், கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மத்திய– மாநில அரசுகள் உடனடியாக எந்தவித உதவியும் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. அதே சமயம் கேரளாவில் அங்குள்ள மாநில அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அனைத்து நிவாரணங்களும் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டது.

பா.ஜனதா ஆட்சியில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள். கரும்பு, பருத்தி, நெல் போன்றவற்றுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.  ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பிறகு தமிழகத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது.  

 ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என்று மோடி அறிவித்தார். ஆனால், கடந்த 10 மாதங்களில் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் மக்கள் நலனை காக்க மத்திய– மாநில அரசுகள் தவறி விட்டன. இதனால்தான் 13 பேர் சுட்டுக்கொல்லப்படும் நிலை ஏற்பட்டது.

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு பற்றி உண்மை கண்டறிய சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, செயற்குழு உறுப்பினர் நூர்முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பிரசார பயணம் புதுக்கடை, கருங்கல், அழகியமண்டபம், ஆற்றூர், குலசேகரம் போன்ற பகுதிகள் வழியாக சென்றது.


Next Story