புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரி ‘ஜாக்டோ’ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரி ‘ஜாக்டோ’ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2018 11:00 PM GMT (Updated: 9 Jun 2018 7:36 PM GMT)

புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரி ‘ஜாக்டோ’ அமைப்பினர் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருப்பூர்,

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் (ஜாக்டோ) திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில சட்ட செயலாளர் கர்னல் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட அமைப்பு செயலாளர் பழனிவேல், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், மாநில துணை தலைவர் கனகராஜ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஜோசப் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 7–வது ஊதியக்குழு அறிவித்த ஊதிய உயர்வில் 21 மாத கால நிலுவை தொகையை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும். மேலும், இதில் உள்ள முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்டுள்ள ஒருநபர் குழு ஆசிரியர் இயக்கங்களை அழைத்து ஆலோசனை செய்து முரண்பாடுகளை களைய வேண்டும்.

தனியார் பள்ளிகளில் ஆர்.டி.இ. சட்டத்தின் படி மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். பள்ளி கல்வித்துறையில் ஆட்குறைப்பு என்ற அடிப்படையில் பணி நிரவல் மூலம் ஆசிரியர்களை பணிமாறுதல் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 20 சங்கங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.


Next Story