கட்டிட மேஸ்திரி மனைவி மர்மசாவில் திருப்பம்: கழுத்தை இறுக்கி கொன்றதாக பெண் கைது


கட்டிட மேஸ்திரி மனைவி மர்மசாவில் திருப்பம்: கழுத்தை இறுக்கி கொன்றதாக பெண் கைது
x
தினத்தந்தி 9 Jun 2018 10:15 PM GMT (Updated: 9 Jun 2018 9:09 PM GMT)

நல்லம்பள்ளி அருகே, கட்டிட மேஸ்திரியின் மனைவி மர்ம சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக பெண் கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஒட்டப்பட்டியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி மணிகண்டன். இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 26). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் வீட்டில் கட்டிலில் படுத்திருந்த தனலட்சுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தனலட்சுமியின் தந்தை ராமசாமி (59) கொடுத்த புகாரின்பேரில், அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில் நல்லம்பள்ளி பாளையம்புதூர் கிராமத்தை சேர்ந்த முருகன் மனைவி சாலா (26) என்பவர் தனலட்சுமியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சாலா கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

தனலட்சுமியும், சாலாவும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே இடத்தில் கூலி வேலை செய்துள்ளனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சாலாவை வீட்டுக்கு அழைத்துச்செல்ல அவருடைய கணவர் முருகன் அவ்வப்போது சாலா வேலை செய்யும் இடத்துக்கு வருவார். அப்போது தனலட்சுமிக்கும், முருகனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த சாலா தனலட்சுமியை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் முருகனுடனான தொடர்பை கைவிடவில்லை.

இந்த நிலையில் சாலா சம்பவத்தன்று தனலட்சுமி வீட்டுக்கு சென்று தனது கணவருடனான தொடர்பை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் அவர் துப்பட்டாவை வைத்து தனலட்சுமி கழுத்தில் இறுக்கியதோடு, தனது காலால் அவரது கழுத்திலும் அழுத்தியுள்ளார். இதில் தனலட்சுமி இறந்து விட்டார்.

மேற்கண்ட விவரங்களை சாலா வாக்குமூலமாக அளித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story