பிளாஸ்டிக் தொழிற்சாலை-அட்டைப்பெட்டி கம்பெனியில் தீ விபத்து


பிளாஸ்டிக் தொழிற்சாலை-அட்டைப்பெட்டி கம்பெனியில் தீ விபத்து
x
தினத்தந்தி 9 Jun 2018 10:45 PM GMT (Updated: 9 Jun 2018 9:31 PM GMT)

திருவொற்றியூரில் பிளாஸ்டிக் தொழிற்சாலை மற்றும் அட்டைப்பெட்டி கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

திருவொற்றியூர்,

திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் சாலையில் ஆட்டுமந்தை அருகே உள்ள குப்பை மேடு பகுதியையொட்டி சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது.

இங்கு பழைய பிளாஸ்டிக் பொருட்களை உருக்கி, பிளாஸ் டிக் குழாய்கள் மற்றும் பிளாஸ் டிக் சாலை போடுவதற்கு தேவையான மூலப்பொருட் கள் தயாரிக்கப்பட்டு வந்தது.

ஆனால் இந்த தொழிற்சாலையின் உரிமம் புதுப்பிக்கப்படாததால் மாநகராட்சி சார்பில் ‘சீல்’ வைக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாகவே இந்த தொழிற்சாலை பூட்டியே கிடந்தது.

இந்தநிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் இந்த தொழிற்சாலையின் உள்ளே இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தொழிற்சாலையில் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக மணலி, திருவொற்றியூர், எண்ணூர் மற்றும் அம்பத்தூர் உள்பட 6 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பிளாஸ்டிக் தொழிற்சாலையில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால் தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு இருந்ததால், தீயணைப்பு வீரர்களால் உடனடியாக உள்ளே செல்ல முடியவில்லை. அதற்குள் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது. உள்ளே பழைய பிளாஸ்டிக் பொருட்களாக இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. தொழிற்சாலையின் இரும்பு மேற்கூரையும் தீயில் உருகி விழுந்தது.

காற்றின் வேகத்தால் தீ மளமளவென அருகில் உள்ள நாராயணன் என்பவருக்கு சொந்தமான அட்டைப்பெட்டி கம்பெனிக்கும் பரவியது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள், பிளாஸ்டிக் தொழிற்சாலை கதவை உடைத்து உள்ளே சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணிநேரம் போராடி பிளாஸ்டிக் தொழிற்சாலை மற்றும் அட்டைப்பெட்டி கம்பெனியில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் பிளாஸ்டிக் தொழிற்சாலை, அட்டைப்பெட்டி கம்பெனியில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.

பிளாஸ்டிக் தொழிற்சாலை பூட்டிக்கிடந்ததாலும், அட்டைப்பெட்டி கம்பெனியில் இருந்த அதன் மேலாளர் உடனடியாக வெளியே வந்து விட்டதாலும் உயிர் சேதம் தவிர்க் கப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இதுபற்றி திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story