சாலை விரிவாக்க பணி எதிரொலி: கோவில் அருகே இருந்த 2 கடைகள் இடித்து அகற்றம்


சாலை விரிவாக்க பணி எதிரொலி: கோவில் அருகே இருந்த 2 கடைகள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 9 Jun 2018 10:45 PM GMT (Updated: 9 Jun 2018 9:33 PM GMT)

எலச்சிப்பாளையத்தில் சாலை விரிவாக்க பணி நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் இடத்தில் இருந்த 2 கடைகள் இடித்து அகற்றப்பட்டன.

எலச்சிப்பாளையம்,

திருச்செங்கோடு தாலுகா எலச்சிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.13 சென்ட் நிலம் உள்ளது. இதில் 1986-ம் ஆண்டு 6 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டது. சாலை விரிவாக்க பணியையொட்டி 4 கடைகள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இடிக்கப்பட்டது. அதன்பிறகு 2 கடைகள் மட்டுமே இடிக்கப்படாமல் செயல்பட்டு வந்தது. அதில் டீக்கடையும், சலூன் கடையும் அடங்கும்.

இந்த நிலையில் 2 கடைகளின் அருகே சிலர் மதுபாட்டில்களை திருட்டுத்தனமாக கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர். இதனால் அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவிகளும், பெண்களும் மதுபிரியர்களால் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதன் காரணமாக இந்த 2 கடைகளையும் அகற்ற கோரி அப்பகுதி மக்கள் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 2 கடைகளை அகற்றி விட்டு நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சாலை விரிவாகத்துக்கு இடையூறாக இருந்த 2 கடைகளை நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கடைகள் அகற்றப்பட்ட இடத்தில் புதிதாக நிழற்குடை அமைக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

Next Story