கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி தர பெற்றோர்கள் கோரிக்கை


கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி தர பெற்றோர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 Jun 2018 9:57 PM GMT (Updated: 9 Jun 2018 9:57 PM GMT)

மாகாண்யம் அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி தர பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் மலைப்பட்டை அடுத்த மாகாண்யம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வந்தது. இந்த தொடக்கப்பள்ளி அரசு உயர்நிலை பள்ளியாக கடந்த 2005-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.

தரம் உயர்த்தப்பட்ட இந்த பள்ளியில் கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து 10-ம் வகுப்பில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தில் மலைப்பட்டு, மாகாண்யம், மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

11 ஆசிரியர்கள் உள்ள இந்த பள்ளிக்கூடத்தில் உயர்நிலை பள்ளிக்கு 10 வகுப்பறைகள் இருக்க வேண்டிய நிலையில் 6 வகுப்பறைகள்தான் உள்ளது. தலைமை ஆசிரியருக்கான அறையும் இல்லை.

பள்ளிக்கூட வளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நூலகக் கட்டிடத்தில் தற்போது தலைமை ஆசிரியர் அறை இயங்கி வருகிறது. இதனால் நூலகத்திற்கு யாரும் வருவதில்லை.

பள்ளியில் போதிய கழிவறை வசதிகள் இல்லாமல் உள்ளது. மாணவர்களுக்கான ஆய்வுக்கூட அறையும் இல்லை. இதேபோல் மாணவ மாணவிகள் விளையாடுவதற்கென போதிய இடம் இல்லாததால் யாரும் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவதில்லை.

ஏற்கனவே உயர்நிலை பள்ளிக்கு என தேர்வு செய்யப்பட்ட இடம் கிடப்பில் உள்ளது. எனவே சிறிய இடத்திலேயே தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிகள் இருப்பதால் உயர்நிலை பள்ளிக்கென தனி இடம் தேர்வு செய்ய வேண்டும்.

மாணவர்களின் எதிர்கால நலன் கருதி படிப்பதற்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். விளையாட்டு திடல் அமைத்திடவும் வேண்டும்.

ஆய்வுக்கூட அறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய பள்ளிக்கட்டிடம் கட்ட வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story