மாதவிடாய் கால மகிழ்ச்சி


மாதவிடாய் கால மகிழ்ச்சி
x
தினத்தந்தி 10 Jun 2018 6:20 AM GMT (Updated: 10 Jun 2018 6:20 AM GMT)

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஹைராகி கிராமத்தை சேர்ந்த சிறுமிகள் பள்ளி செல்வதை பாதியிலே நிறுத்தி விடும் வழக்கம் கொண்டவர்கள்.

தொடக்கக் கல்வியை கூட அந்த பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள்  பூர்த்தி செய்யாமல் இருக்கிறார்கள்.

பள்ளியில் பெண்களுக்கான கழிப்பறை வசதி இல்லாததும், இருக்கும் கழிப்பறைகளும் பயன்படுத்த முடியாத அளவிற்கு அசுத்தமாக இருப்பதும் அதற்கு காரணம். சாதாரண நாட்களில் இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளித்து கொள்ளும் மாணவிகள் மாதவிடாய் காலங்களில் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதனால் பூப்படைந்ததும் அவர்கள் பள்ளிக்கு செல்வதில்லை. மேலும் அங்குள்ள கிராம மக்களிடத்தில் பெண்கள் படிப்பது அவசிய மற்றது என்ற எண்ணமும் மேலோங்கி இருக்கிறது. பெண்கள் கல்விக்கு எதிரான இத்தகைய நிலையை மாற்றுவதற்காக போராடிக்கொண்டிருக் கிறார் ஹைராகி கிராமத்தின் தலைவர் ஹரி பிரசாத்.

முதலில் அவர் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி பிரசாரம் செய்தார். வீடு வீடாக சென்று பெற்றோர்களிடம் மாதவிடாய் என்பது இயற்கையானது என்றும் அது இல்லாமல் உலகில் மனித இனம் வளர்ச்சியடையாது என்றும் விழிப்புணர்வு ஏற் படுத்தினார். பெண்களை பள்ளிக்கு அனுப்புவதன் முக்கியத்துவத்தையும் உணர்த்தினார்.

அப்போதுதான் வெறும் விழிப்புணர்வு மட்டும் போதாது என்பது அவருக்கு தெரியவந்திருக்கிறது. இதையடுத்து தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பள்ளிகளில் கழிப்பறை கட்ட வழிவகை செய்திருக்கிறார். மேலும் பெண்கள் மாதவிடாய் நாட்களை சுமுகமாக அணுகுவதற்கு நாப்கின் பேடுகளை வழங்கி வருகிறார். இதனால் அந்த பகுதி மக்கள் இவரை ‘பேட் மேன்’ என்று அழைக்கிறார்கள். இவரது முயற்சியின் பலனாக தற்போது அந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் பள்ளிக் கூடம் செல்ல தொடங்கி இருக்கிறார்கள். அங்கு பெண்களின் கல்வி நிலை மேம்பட்டிருக்கிறது. 

Next Story