கோத்தகிரியில் சாலையின் நடுவில் சண்டையிட்ட காட்டெருமைகள் பொதுமக்கள் பீதி


கோத்தகிரியில் சாலையின் நடுவில் சண்டையிட்ட காட்டெருமைகள் பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 10 Jun 2018 10:30 PM GMT (Updated: 10 Jun 2018 6:42 PM GMT)

கோத்தகிரியில் உள்ள சாலையின் நடுவே 2 காட்டெருமைகள் ஒன்றோடொன்று சண்டையிட்டு கொண்டிருந்ததால் அந்த சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் பீதியடைந்தனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது வனப்பகுதியில் இருந்து உணவு தேடி குடியிருப்பு பகுதிகள், விவசாய தோட்டங்கள், மற்றும் தேயிலை தோட்டங்களுக்குள் கும்பலாக காட்டெருமைகள் உலா வருவதும்,

அவ்வபோது மனிதர்களை தாக்கி அவர்கள் காயமடைவதும் வழக்கமாகி வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் கோத்தகிரி காமராஜர் சதுக்கம் அருகிலுள்ள ஆதிவாசி நலச்சங்க மருத்துவமனை முன் உள்ள சாலையின் நடுவே காட்டெருமைகள் இரண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டு இருந்ததால் அந்தவழியாக நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பீதியடைந்தனர்.

இதனையடுத்து சற்று நேரம் சாலையின் நடுவே நின்றுக் கொண்டிருந்த காட்டெருமைகள் அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்குள் சென்றன. கட்டெருமைகள் செல்லும் வரை காத்திருந்து பின்னரே பொதுமக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு சென்றனர். நாளுக்கு நாள் பெருகி வரும் காட்டெருமைகள் சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் சுற்றிதிரிவதுடன் தேயிலை தோட்டங்கள், மேரக்காய் உள்ளிட்ட விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து விளை பொருட்களையும் சேதப்படுத்தி வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினரும் திணறி வருங்கின்றனர். மனித வனவிலங்கு மோதலை தடுக்க வனவிலங்குகளின் உணவு பழக்கத்தை மாற்றாத வகையில் பொதுமக்கள் ஒத்துழைப்பதுடன் வனப்பகுதி மற்றும் விவசாய விளை நிலங்கள், தேயிலை தோட்டங்களை அழித்து சொகுசு பங்களாக்களும், தனியார் விடுதிகளுடம் கட்டுவதற்கு அனுமதி அளிப்பதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story