ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 10 Jun 2018 10:45 PM GMT (Updated: 10 Jun 2018 6:42 PM GMT)

ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் ஊட்டியில் தாவரவியல் பூங்கா, கலெக்டர் அலுவலகம், புனித ஸ்டீபன் ஆலயம், புனித தாமஸ் ஆலயம், தூய இருதய ஆண்டவர் ஆலயம் உள்பட பல்வேறு கட்டிடங்களை கட்டினார்கள். அந்த கட்டிடங்கள் தற்போதும் பழமை மாறாமல், வலிமையுடனும், பொழிவுடனும் அழகாக காட்சி அளிக்கிறது. இங்கிலாந்து நாட்டில் நிலவும் சீதோஷ்ண நிலை ஊட்டியிலும் நிலவியதால், ஆங்கிலேயர்கள் மலையை குடைந்து ஊட்டியில் மலை ரெயிலை இயக்கினர்.

இதில் 121 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் ஆலயம் ஊட்டி வண்டிசோலை பகுதியில் உள்ளது. இந்த ஆலயம் பாரம்பரியம் மிக்க கட்டிடம் ஆகும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தூய இருதய ஆண்டவர் ஆலயத்துக்கு வந்து செல்கிறார்கள். மேலும் அவர்கள் ஊட்டியில் தங்களது முன்னோர்கள் உருவாக்கிய பல்வேறு கட்டிடங்களை பார்வையிடுவதுடன், புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். அந்த ஆலயத்தில் சினிமா படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதனால் ஆலயம் மிகவும் புகழ் பெற்றதாக திகழ்ந்து வருகிறது.

ஊட்டி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தின் 121–வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை 9 மணிக்கு பங்கு தந்தை ஜான் ஜோசப் தலைமையில் சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. பங்கு தந்தை ஜான் ஜோசப் ஜெபம் செய்து ஆலயத்தின் முன்புறம் உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியில் உதவி பங்கு தந்தை ரெனால்டு பிரபு மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

திருவிழாவை முன்னிட்டு வருகிற ஒரு வாரம் சிறப்பு திருப்பலி, மறையுரை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. வருகிற 13–ந் தேதி முதல் 15–ந் தேதி வரை தினமும் மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை பரிசுத்த ஜெப வழிபாடு, சிறப்பு மறையுரை, குணமளிக்கும் ஜெபம் மற்றும் திருப்பலி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி வருகிற 17–ந் தேதி நடைபெறுகிறது. அன்றையதினம் காலை 9 மணிக்கு நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டு பாடற்திருப்பலி நடக்கிறது. மாலை 5 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடைபெற உள்ளது.


Next Story